Published : 01 Nov 2016 03:35 PM
Last Updated : 01 Nov 2016 03:35 PM
மதுரை மாநகராட்சியில் மாநகர நகர்நல அலுவலர் பணியிடம் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக காலியாக இருப்பதால், சுகாதாரப் பணிகள் பாதிக்கப்பட்டு தெருக் களில் குப்பைகள் தேங்குவதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் சென்னைக்கு அடுத்து பெரிய மாநகராட்சியாக மதுரை இருக்கிறது. 100 வார்டுகளில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். ஒரு நாளைக்கு 548 டன் குப்பை நகரில் சேருகிறது.
வார்டுகளில் குவியும் குப்பை களை லாரிகள் மூலம் சேகரித்து வெள்ளக்கல் கிடங்குக்கு எடுத்து செல்வது, நாய்களுக்கு கருத்தடை செய்து ரேபீஸ் நோயை கட்டுப்படுத்துவது, காசநோய், எய்ட்ஸ், தட்டம்மை, போலியோ, மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் தடுப்பு உள்ளிட்டவை மாநகராட்சி சுகாதாரத் துறையின் அன்றாட முக்கியப் பணிகள்.
மாநகர நல அலுவலர் தலை மையில் சுகாதாரத் துறையில் உதவி நகர் நல அலுவலர், 25 துப்புரவு ஆய்வாளர்கள், 2700 துப்புரவு பணியாளர்கள் பணி புரிகின்றனர்.
மாநகராட்சி பகுதியில் செயல்படும் 13 மகப்பேறு மருத்துவமனைகள், 2 மகப்பேறு மையங்கள், 17 அலோபதி மருத்துவமனைகள், 3 ஆயுர்வேத மருத்துவமனைகள், 3 சித்தா மருத்துவமனைகள் மற்றும் பிறப்பு, இறப்புச் சான்றிதழ்கள் வழங்கும் நிர்வாகப் பணிகளை சுகாதார மாநகர் நல அலுவலரே கவனிக்கிறார். அதனால், மாநகராட்சியில் மற்ற எல்லா துறைகளை காட்டிலும் சுகாதா ரத்துறையின் செயல்பாடு முக்கி யமானது. மதுரை மாநகர் நல அலுவலராக யசோதாமணி இருந்தார். அவர், இடமாற்றம் செய்யப்பட்டபின், அவருக்கு பதிலாக புதிய அதிகாரி தற்போது வரை நியமிக்கப்படவில்லை.
மதுரை மண்டல சுகாதார ஆய்வாளர் பயிற்சி மைய முதல்வர் டாக்டர் செந்தில்குமார், நகர்நல பணிகளை கூடுதல் பொறுப்பாக கவனிக்கிறார். அவருக்கு, போதிய அனுபவம் இல்லாததால், மாநகராட்சி சுகாதாரப்பணிகளை முழுமையாக கண்காணிக்க முடியவில்லை. கடந்த சில மாதங்களாக பாதாள சாக்கடை உள்ளிட்ட சுகாதாரப் பணிகளை சரியாக மேற்கொள்ளாததால் டெங்கு காய்ச்சல் தீவிரமாகி உள்ளது. இதில் உயிரிழப்புகள் ஏற்பட்டாலும், நகரில் டெங்கு காய்ச்சல் இல்லை என மாநகராட்சி சாதித்து வருகிறது. பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் உடனுக்குடன் கிடைக்கவில்லை. இடைத்தரகர் ஆதிக்கம் அதிகமாகியுள்ளது.
தற்போது கவுன்சிலர்கள், மேயர்கள் பதவிக்காலம் முடிந்ததால் வார்டுகளில குப்பைகள் உடனுக்குடன் அள் ளப்படவில்லை. தீபாவளி முடிந்த மறுநாள் அதிகாலையில் வழக்கமாக குப்பைகள் அள்ளப்பட்டு விடும். இந்த முறை, அவ்வாறு அள்ளாததால் குப்பைகள் மலைபோல தேங்கி நகரமே சுகாதாரமில்லாமல் காணப்பட்டது. நேற்றுதான் இந்த குப்பைகள் அள்ளப்பட்டன. மாநகராட்சியில் தேக்கமடைந்துள்ள சுகாதாரப் பணிகளை விரைவுபடுத்த, கண்காணிக்க, சுகாதாரத் துறைக்கு உடனடியாக மாநகர நல அலுவலரை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் சந்தீப் நந்தூரியிடம் கேட்டபோது, சுகாதாரத்துறை பயிற்சி கல்லூரி முதல்வர் செந்தில்குமார், கூடுதல் பொறுப்பாக மாநகராட்சி நகர் நல அலுவலர் பணியிடத்தில் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய சுகாதார நகர்நல அலுவலரை நியமிக்க அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். விரைவில் நியமிக்க ஏற்பாடுகள் நடக்கிறது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT