

குன்றத்தூர்: சென்னையின் குடிநீர் ஏரிகளான செம்பரம்பாக்கம் மற்றும் புழல்ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் முழு கொள்ளளவை நெருங்கியது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை யாக இரு ஏரிகளில் இருந்தும் நேற்று விநாடிக்கு தலா 100 கனஅடி நீர் திறக்கப்பட்டது. இதனால் கரையோர மக்களுக்கு முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 1,000 கனஅடியாக அதிகரித்தது. அதேநேரத்தில் நேற்றைய நிலவரப்படி, ஏரியின் நீர்மட்டம் 20.75 அடியாகவும், மொத்த கொள்ளளவு 2.7 டிஎம்சியாகவும் இருந்தது. நீர்வரத்து, விநாடிக்கு 1,180 கன அடியாகவும் இருந்தது.
நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா. ஆர்த்தி முன்னிலையில், ஏரியில் இருந்து நேற்று மாலை விநாடிக்கு 100 கனஅடி உபரி நீர் திறக்கப்பட்டது. மூன்று கண் மதகுகளில், மூன்றாவது ஷட்டர் வழியாக உபரிநீரை திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால், அதன் மோட்டார் வேலை செய்யாததால், இரண்டாவது ஷட்டர் வழியாக உபரி நீர் திறக்கப்பட்டது. முன்னதாக, 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.
புழல் ஏரி திறப்பு: சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான புழல் ஏரிக்கு தற்போதைய வடகிழக்கு பருவமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. 20.86 சதுர கி.மீ., பரப்பளவில் பரந்து விரிந்துள்ள புழல் ஏரிக்கு நேற்று காலை 6 மணி நிலவரப்படி விநாடிக்கு 1,997 கனஅடி நீர் வந்தது. இதனால், 3,300 மில்லியன் கனஅடி கொள்ளளவு மற்றும் 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரியில் நேற்று காலை நிலவரப்படி 2,692 மில்லியன் கனஅடி நீர் இருப்பும் 18.42 அடி நீர்மட்டமும் உள்ளது.
இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று நீர்வளஆதாரத் துறை அதிகாரிகள், புழல் ஏரியிலிருந்து 1 ஷட்டர் மூலம் விநாடிக்கு 100 கனஅடி நீரை திறந்தனர். இந்த நீரின் அளவு நீர்வரத்தை பொறுத்து அதிகரிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இதையடுத்து நாரவாரிக்குப்பம், வடகரை, கிராண்ட்லைன், புழல்,வடபெரும்பாக்கம், மஞ்சம்பாக்கம், கொசப்பூர் மற்றும் மணலி, சடையன்குப்பம் ஆகிய பகுதிகளில் கால்வாய் கரையோர பகுதி மக்களுக்கு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளார்.