Published : 02 Nov 2022 07:59 AM
Last Updated : 02 Nov 2022 07:59 AM

ஏற்கெனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு புதிய சட்டம் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: அரசின் பயன்பாட்டுக்காக ஏற்கெனவே கையகப்படுத்திய நிலங்களுக்கு புதிய நிலம் கையகப்படுத்தும் சட்டம் அமலுக்கு வந்த கடந்த 2014 ஜனவரியில் இருந்த சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயம் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகில் தொழில் பூங்கா அமைக்க கடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் அமலுக்கு வந்த கடந்த 2014-ம் ஆண்டு ஜனவரி மாதம் இருந்த சம்பந்தப்பட்ட நிலங்களின் சந்தை மதிப்பின் அடிப்படையில் பெரும்புதூர் பகுதியில்கையகப்படுத்திய தொழில்பூங்கா நிலங்களுக்கு இழப்பீடு நிர்ணயம் செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி டி.சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு, அரசின் பயன்பாட்டுக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில்தான் மத்திய அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. எனவே அந்த சட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்த நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும்.

அரசு இதுதொடர்பான சட்ட விதிகளை அமல்படுத்தினால் மட்டும் போதாது. கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். எனவே ஸ்ரீபெரும்புதூரில் தொழில் பூங்கா அமைக்ககடந்த 2010-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, புதிதாக நிலம் கையகப்படுத்தல் சட்டம்அமலுக்கு வந்த 2014-ம் ஆண்டு ஜனவரியில் இருந்த நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீட்டுத் தொகையை மீண்டும்நிர்ணயம் செய்து இழப்பீட்டுதாரர்களுக்கு வழங்க வேண்டும், எனஅரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x