புதிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி இழப்பீடு கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

புதிய நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி இழப்பீடு கோரிய வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு
Updated on
1 min read

சென்னை: புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வரும் முன் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, புதிய சட்டம் அமலுக்கு வந்த நாளில் குறிப்பிட்ட நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகில் தொழில் பூங்கா அமைக்க கடந்த 2010-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தப்பட்டது. இருப்பினும் இழப்பீடு வழங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்தல் நியாயமான இழப்பீடு மற்றும் வெளிப்படைத்தன்மை சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த சட்டம் அமலுக்கு வந்த 2014-ம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வந்த நாளில் குறிப்பிட்ட நிலத்தின் சந்தை மதிப்பின் அடிப்படையில் இழப்பீடு நிர்ணயிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகளை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி சவுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வு பிறப்பித்த உத்தரவு: "கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்கும் வகையில் மத்திய அரசு புதிய சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அந்தச் சட்டம் அமலுக்கு வந்த நாளில் நிலத்தின் சந்தை மதிப்பு அடிப்படையில் இழப்பீட்டை நிர்ணயிக்க வேண்டும்.

சட்ட விதிகளை அமல்படுத்தினால் மட்டும் போதாது. கையகப்படுத்தப்படும் நிலத்துக்கு நியாயமான இழப்பீடு வழங்குவதையும் அரசு உறுதி செய்ய வேண்டும். தொழிற்பூங்கா அமைக்க 2010-ம் ஆண்டு கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு, புதிய நிலம் கையகப்படுத்தல் சட்டம் அமலுக்கு வந்த 2014-ம் ஆண்டு ஜனவரியில் நிலத்தின் சந்தை மதிப்பு அடிப்படையில் இழப்பீட்டை நிர்ணயித்து வழங்க வேண்டும்" என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in