

சென்னை: தேவர் ஜெயந்தி விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையடுத்து சென்னை, அண்ணாசாலை நந்தனம் சந்திப்பில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலைக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், அமைப்பினர், தொண்டு நிறுவனத்தினர், சமூகத் தலைவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினர் மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில் தேவர் ஜெயந்தி விழாவின்போது, எதிர்புறம் வாகனம் ஓட்டுதல், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுதல், 3 நபர்கள் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தல், அஜாக்கிரதை மற்றும் அதிவேகத்தில் வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிகளை மீறிய குற்றத்துக்காக சென்னை பெருநகர காவல், சைதாப்பேட்டை மற்றும் தேனாம்பேட்டை போக்குவரத்து காவல் துறையினர் 39 வழக்குகள் பதிவு செய்து ரூ.38 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர்.