Published : 31 Oct 2022 05:02 AM
Last Updated : 31 Oct 2022 05:02 AM

தமிழகத்தில் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு - திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும்

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 2 நாட்களுக்கு மிக கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தின் உள் பகுதிகள், கேரளா, தெற்கு கர்நாடகத்தின் உள்பகுதிகள், தெற்கு ஆந்திரா பகுதிகளுக்கு வடகிழக்குப் பருவ மழை பரவியுள்ளது. பருவக் காற்றின் தாக்கத்தால் தென்மேற்கு வங்கக் கடல் மற்றும் அதையொட்டிய தென்இலங்கை கடலோரப் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் அக். 31, நவ. 1, 2, 3-ம் தேதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக். 31-ம் தேதி (இன்று) திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யக்கூடும். சென்னை, செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர்,கள்ளக்குறிச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 1-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழையும், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நவ. 2-ம் தேதி காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

நவ. 3-ம் தேதி தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்

சென்னையில் அடுத்த 48 மணிநேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, மிதமான அல்லது கனமழை பெய்யக்கூடும்.

அக். 30-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, அதிகபட்சமாக தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் 5 செ.மீ., செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம், செய்யூர், காரைக்கால், விழுப்புரம் மாவட்டம் முகையூரில் தலா 4 செ.மீ. மழைபதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x