தாளவாடி பீரேஸ்வரர் கோயிலில் சாணியடி திருவிழா

தாளவாடி பீரேஸ்வரர் கோயிலில் சாணியடி திருவிழா
Updated on
1 min read

தாளவாடி குமிட்டாபுரத்தில் நேற்று நடந்த மலைவாழ் மக்களின் பாரம்பரிய சாணியடி திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலம் தாளவாடி அருகே உள்ள குமிட்டாபுரம் கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த பீரேஸ்வரர் கோயில் உள்ளது. ஆண்டுதோறும் இக்கோயிலில் தீபாவளி பண்டிகைக்கு அடுத்து வரும் நான்காவது நாள் சாணியடி திருவிழா கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம்.

ஊர்வலம்

அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா நேற்று காலை சிறப்புப் பூஜைகளுடன் தொடங்கியது. முன்னதாக கிராமத்தில் அனைத்து பகுதிகளிலும் இருந்து பசுமாட்டு சாணம் சேகரிக்கப்பட்டு, கோயிலின் பின்புறம் குவித்து வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஊர் குளத்தில் இருந்து கழுதை மேல் சுவாமியை வைத்து ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவந்தனர். பின்னர், பீரேஸ்வரருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.

ஆண்கள் மேலாடை அணியாமல் கோயிலுக்குள் சென்று பூஜை செய்தனர். பின்னர், கொட்டி வைக்கப்பட்ட சாணத்தை உருண்டையாக வடிவமைத்தனர். இதில் பங்கேற்ற பக்தர்கள் ஒருவர் மீது ஒருவர் சாணத்தை வீசிக்கொண்டனர். இந்த பாரம்பரிய நிகழ்ச்சியை பெண்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர். நிகழ்ச்சிக்குப் பிறகு பக்தர்கள் அனைவரும் குளத்தில் நீராடிவிட்டு பீரேஸ்வரரை வழிபட்டனர்.

இவ்விழா குறித்து திருவிழா கமிட்டி நிர்வாகிகள் கூறியதாவது:

சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இக்கோயிலில் உள்ள சிவலிங்கத்தை பக்தர் ஒருவர் எடுத்துச்சென்று சாணம் கிடக்கும் குப்பைமேட்டில் எறிந்துள்ளார். இவ்வூரைச் சேர்ந்த மாட்டு வண்டி ஒன்று குப்பைமேட்டின் மீது ஏறிச் செல்லும்போது ஒரு இடத்தில் ரத்தம் வழிந்துள்ளது. இதைக்கண்ட மக்கள் உடனே அந்த இடத்தைத் தோண்டிப் பார்த்தபோது சிவலிங்கம் இருந்துள்ளது. தீபாவளி முடிந்து நான்காவது நாள் சாணத்தில் இருந்து சுவாமி மீண்டு எழுந்ததன் நினைவாக சாணியடி திருவிழா கொண்டாடப்படுகிறது என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in