Published : 29 Oct 2022 05:17 AM
Last Updated : 29 Oct 2022 05:17 AM

தமிழகம், அதை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு - அக்.31, நவ.1-ல் மிக கனமழை பெய்யக் கூடும்

சென்னை: தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை இன்று தொடங்க வாய்ப்பு உள்ளது. வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் 4 நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும். சில பகுதிகளில் அக்.31, நவ.1-ம்தேதிகளில் மிகக் கனமழை பெய்யக் கூடும்.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

காற்று வீசும் திசையில் மாற்றம்: தமிழகம் நோக்கி வீசும் காற்றில்மாற்றம் ஏற்பட்டு, கிழக்கு திசையில்இருந்து காற்று வீசத் தொடங்கியுள்ளது. காற்றில் ஈரப்பதத்தின் அளவும் அதிகரித்துள்ளது. எனவே,தமிழகம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் அக்.29-ம் தேதி (இன்று) வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது.

வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அக்.29, 30, 31, நவ.1 ஆகிய 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும்.

29-ம் தேதி தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய டெல்டா மாவட்டங்கள், கடலூர், விழுப்புரம், தேனி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகள், 30-ம் தேதி கடலூர்,விழுப்புரம் நீங்கலாக மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

மிகக் கனமழை: 31-ம் தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமுதல் மிக கனமழையும், வேலூர், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும்.

நவ.1-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, டெல்டா மாவட்டங்கள், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x