

இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரான புதிய கல்விக் கொள் கையை திமுக உறுதியுடன் எதிர்க் கும் என்று அக்கட்சியின் பொரு ளாளர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரிடம் ஸ்டாலின் சார்பில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
தேசிய கல்விக் கொள்கை 2016 என்பது, 2009 கல்வி உரிமைச் சட்டத்துக்கு எதிராக அமைந்துள்ளது. 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி என்பது 5-ம் வகுப்பு வரை என குறைக்கப்பட்டுள்ளது. 5-ம் வகுப்புக்குப் பிறகு தொடர்ந்து 2 முறை தோல்வி அடைந்தால் படிப்பை தொடர முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது.
இது பாரம்பரியமான குலக் கல்வி முறையை மீண்டும் அறிமுகப்படுத்தும் முயற்சியாகும். 1953-ல் ராஜாஜி அறிமுகப்படுத்திய படிக்கும்போதே பெற்றோரின் தொழிலையும் கற்றுக் கொள்ளும் கல்வித் திட்டத்தை புதிய கல்விக் கொள்கை நினைவுபடுத்துகிறது.
பள்ளிகள், பல்கலைக்கழகங் களில் சமஸ்கிருதத்தை கற்பிப்பதற் கான ஏற்பாடுகள் செய்யப்படும் என புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கையில் கூறப்பட்டுள் ளது. தமிழ், ஆங்கிலம் என இரு மொழிக் கொள்கையை தமிழகம் பின்பற்றி வருகிறது. எனவே, சமஸ்கிருதம் திணிக்கப்படுவதை ஒருபோதும் ஏற்க முடியாது.
10-ம் வகுப்புக்கு 2 வகையான தேர்வு நடத்தப்படும் என புதிய கல்விக் கொள்கை கூறுகிறது. இது மாணவர்களைப் பிளவுபடுத்தும் முயற்சியாகும். இதன்மூலம் எஸ்சி, எஸ்டி, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் மேல்படிப்புக்குச் செல்ல முடியாத நிலை ஏற்படும். இட ஒதுக்கீடு குறித்து ஒரு வார்த்தைகூட புதிய கல்விக் கொள்கையில் இடம்பெறாதது அதிர்ச்சி அளிக்கிறது. இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதற்கான அபாயம் நெருங்கி வருகிறது என்பதையே இது காட்டுகிறது.
கல்வித் துறையில் பன்னாட்டு நிறுவனங்களை அனுமதித்தால் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி), இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்சிஐ), ஏஐசிடிஇ, என்சிடிஇ போன்ற அமைப்புகள் தேவையற்றதாகிவிடும். இதன் மூலம் உயர் கல்வி என்பது ஏழை களுக்கு எட்டாக்கனி ஆகிவிடும்.
சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கும் கல்வி உரிமைச் சட்டம் விரிவுபடுத்தப்படும் என்பது சிறுபான்மையினரிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்வு நடத்தி ஆசிரியர்களை மதிப்பீடு செய்வது அவர்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதலாகும். இந்தியாவின் பன்முகத்தன் மைக்கு எதிராக புதிய கல்விக் கொள்கை வடிவமைக்கப் பட்டுள்ளது. எனவே, தேசிய கல்விக் கொள்கையை திமுக உறுதியுடன் எதிர்க்கிறது.
இவ்வாறு மனுவில் மு.க.ஸ்டா லின் தெரிவித்துள்ளார்.