கரோனா காலத்தில் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு: தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம் | சென்னை உயர்நீதிமன்றம்
கோப்புப் படம் | சென்னை உயர்நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: கரோனா காலத்தில் உயிரிழந்த மருத்துவரின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக காலம் தாழ்த்தாமல் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா காலகட்டத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு மருத்துவமனையில் பணிபுரிந்த அரசு மருத்துவரான ஏ.கே.விவேகானந்தன் கடந்த 2020 நவ.22 அன்று பணியில் இருந்தபோது கரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தார். இந்நிலையில் அரசு மருத்துவர் விவேகானந்தனின் மனைவி வி.ஆர்.திவ்யாவுக்கு கருணை அடிப்படையில் அரசு வேலை மற்றும் ரூ.25 லட்சம் நிவாரணம் கோரி அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக்குழு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக நேற்று (அக்.27) விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கில் பதிலளிக்க அரசுத் தரப்பில் மீண்டும் அவகாசம் கோரப்பட்டது. அதற்கு எதிர்ப்பு மனுதாரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் நந்தகுமார், கரோனா பாதிப்பு ஏற்பட்டு அரசு மருத்துவரான விவேகானந்தன் இறந்து 2 ஆண்டுகளாகி விட்டது. ஆனால் இதுநாள் வரை அவரது குடும்பத்துக்கு வழங்க வேண்டிய ரூ. 25 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படவில்லை. பொறியியல் பட்டதாரியான அவருடைய மனைவி 2 குழந்தைகளுடன் வருமானத்துக்கு வழியின்றி தவித்து வருகிறார் என்பதால் அவருக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கக்கோரி விண்ணப்பித்தும் அதற்கும் பதில் இல்லை.

இந்த வழக்கு விசாரணைக்கு வரும்போதெல்லாம் அரசு தரப்பில் அவகாசம் கோரப்படுகிறது, என ஆட்சேபம் தெரிவி்த்தார். அதையடுத்து நீதிபதி, இதுதொடர்பாக தமிழக அரசு இனிமேலும் காலம் தாழ்த்தாமல் பதிலளிக்க வேண்டுமென அறிவுறுத்தி, விசாரணையை வரும் நவ.18-க்கு தள்ளி வைத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in