தமிழகத்தில் நவ.4 வரை பரவலாக மழை வாய்ப்பு

தமிழகத்தில் நவ.4 வரை பரவலாக மழை வாய்ப்பு
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நாளை தொடங்குவதற்கான சூழல் உருவாகியுள்ளது. வரும் நவ. 4-ம் தேதி வரை பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தற்போதைய வானிலை நிலவரப்படி, வடதமிழகப் பகுதிகளில் காற்றின் போக்கு மாறி, காற்றில் ஈரப்பதம் அதிகரித்துள்ளது. அதனால் தமிழகம், கேரளா, தெற்கு ஆந்திரப்பகுதிகளில் வடகிழக்குப் பருவமழை அக்.29-ல் (நாளை) தொடங்குவதற்கான சூழல் நிலவுகிறது.

இதனால், தமிழகம், புதுச்சேரியில் நவ.4 வரை பரவலாக, மிதமான மழை பெய்யக் கூடும். ஓரிருஇடங்களில் கனமழை பெய்யலாம்.

தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சிநிலவுகிறது. இதனால் அக். 28-ல் (இன்று) தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில், இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

அக்.29-ம் தேதி தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

30-ம் தேதி நீலகிரி, கோவை,திருப்பூர், டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்கள் மற்றும் காரைக்காலில் சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும். வரும்31-ம் தேதி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைபெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும். இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in