Published : 28 Oct 2022 05:32 AM
Last Updated : 28 Oct 2022 05:32 AM

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு | முபினின் நெருங்கிய உறவினர் கைது - கூட்டாளிகளிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை

அப்சர்கான்

கோவை/சென்னை: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கில் ஜமேஷா முபினின் நெருங்கிய உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை கோட்டைமேடு சங்கமேஸ்வரர் கோயில் முன் கடந்த 23-ம் தேதி காரில் இருந்த சிலிண்டர் திடீரென வெடித்ததில், ஜமேஷா முபின்(28) என்பவர் உயிரிழந்தார். அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் ரசாயனங்கள், வயர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி, முகமது தல்கா (25), முகமது அசாருதீன் (23), முகமது ரியாஸ் (27), பெரோஸ் இஸ்மாயில் (27) முகமது நவாஸ் இஸ்மாயில் (26) ஆகியோரைக் கைது செய்தனர்.

தொடர்ந்து, முபினின் உறவினர்கள், நண்பர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. முபினின் நெருங்கிய உறவினரான, உக்கடம் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியக் குடியிருப்பில் வசித்துவரும் எலெக்ட்ரீஷியன் அப்சர்கான்(28) என்பவரது வீட்டிலும் போலீஸார் சோதனை நடத்தினர். அங்கிருந்த லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், ஜமேஷா முபினின் பெரியப்பா மகன்தான் அப்சர்கான் என்பதும், அவரது வீட்டுக்கு முபின் அடிக்கடி வந்து சென்றதும் தெரிந்தது.

கார் வெடிப்பதற்கு சில நாட்களுக்கு முன்புவரை அப்சர்கான் வீட்டில்தான் அந்தக் கார் அதிக முறை நிறுத்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீஸார் நேற்று முன்தினம் நள்ளிரவு அப்சர்கானைக் கைது செய்தனர்.

அவரை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையில், நாட்டு வெடிகுண்டுகளைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் மூலப் பொருட்களான பொட்டாசியம் நைட்ரேட், சல்பர் பவுடர் உள்ளிட்ட ரசாயனப் பொருட்களை ஜமேஷா முபின் ஆன்லைன் மூலம் வாங்கியதும், இதற்கு அப்சர்கான் உதவியதும் விசாரணையின் தெரியவந்துள்ளது. அதேசமயம், வெடி மருந்துகளை வாங்க வேறு சிலரும் உதவியிருக்கலாம் என்று சந்தேகத்தின் அடிப்படையிலும் விசா ரிக்கின்றனர்.

இதற்கிடையில், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். கைது செய்யப்பட்ட 5 பேரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி கோவை ஜுடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் எண்.4-ல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர்களை 3 நாட்கள் விசாரிக்க நீதிபதி அனுமதி அளித்ததால், தனிப்படை போலீஸார் நேற்று முன்தினம் அவர்களைக் காவலில் எடுத்தனர்.

அவர்கள் 5 பேரையும் தனித் தனியாக வெவ்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று போலீஸார் விசாரித்தனர். மூன்று நாட்கள் மட்டுமே விசாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், அவர்களிடம் போலீஸார் விடிய விடிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

சிறப்புப் பிரிவு போலீஸார்

இதற்கிடையில், மத அடிப்படை வாத, பயங்கரவாத அமைப்புகளின், வெளிப்படையான மற்றும் ரகசியத் தகவல்களை கண்காணிக்கும், பயங்கரவாதிகளின் தீய செயல் திட்டங்களை முறியடிக்கும் ‘சிறப்புப் பிரிவு’ போலீஸாரும் தற்போது கோவையில் முகாமிட்டுள்ளனர். மேலும், அனைத்து மாவட்டங்களிலும் பாதுகாப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அதி கரிக்கப்பட்டுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x