

மதுரை: பெண் ஊராட்சித் தலைவர் மீதான தனியார் நிறுவனத்திடம் பணம் கேட்டு மிரட்டிய புகாரை விசாரித்து, குற்றச்சாட்டு உறுதியானால் பதவி நீக்கம் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் சேதுராயன்புதூர் ஊராட்சித் தலைவர் சுந்தரி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில், "சேதுராயன்புதூர் ஊராட்சிப் பகுதியில் அரசன் நைட்ரஸ் கம்பெனி உரிய அனுமதியில்லாமல் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தை மூட ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை நிறுவனத்தை மூடவில்லை. இந்த நிறுவனத்தை மூட உத்தரவிட வேண்டும்" இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு விசாரித்தது.
நிறுவன வழக்கறிஞர் வாதிடுகையில், "மனுதாரர் ஊராட்சித் தலைவர் பதவியை துஷ்பிரயோகம் செய்து பணம் கேட்டு மிரட்டினார். மனுதாரர் கணவர் மற்றும் இரு மகன்களும் கம்பெனிக்கு வந்து பணம் கேட்டு மிரட்டினர். ஊழியர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். பணம் தராவிட்டால் மக்களை கூட்டி வந்து போராட்டம் நடத்துவதாக மிரட்டினார். இதற்கு வீடியோ ஆதாரம் உள்ளது" என்றார்.
இருதரப்பையும் விசாரித்த பின் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "மனுதாரர் மீது கம்பெனி தரப்பில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு கடுமையானது. இதுதொடர்பாக நெல்லை மாவட்ட ஆட்சியர் விசாரணை நடத்த வேண்டும். குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் மனுதாரரை ஊராட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். குற்ற வழக்கும் பதிவு செய்ய வேண்டும்" இவ்வாறு நீதிபதிகள் தெரிவித்தனர்.