Published : 27 Oct 2022 05:42 PM
Last Updated : 27 Oct 2022 05:42 PM

டெண்டர் ஒதுக்கீட்டில் எந்தப் பங்கும் இல்லை: உயர் நீதிமன்றத்தில் எஸ்.பி.வேலுமணி தரப்பு வாதம் 

எஸ்.பி.வேலுமணி | கோப்புப்படம்

சென்னை: மாநகராட்சி பணிகளுக்கான டெண்டர்கள் ஒளிவுமறைவற்ற வகையில் ஒதுக்கப்பட்டதாகவும், டெண்டர் ஒதுக்கீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை எனவும் முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் கோரியதில் முறைகேடுகள் செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனு, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முன்னாள் அமைச்சர் வேலுமணி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராஜு, "டெண்டர் முறைகேடு தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் 16-ம் தேதி அளிக்கப்பட்ட புகார்களில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டது. அந்த வழக்குகளின் விசாரணையின் போது, புகார் தொடர்பாக எஸ்பி பொன்னி தலைமையில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி ஆரம்பகட்ட விசாரணை நடத்திய எஸ்பி பொன்னி, புகாரில் எந்த முகாந்திரமும் இல்லை என அறிக்கை அளித்ததார். அதற்கு ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஒப்புதல் அளித்து, அரசுக்கு அனுப்பினார். அதனை ஆய்வு செய்த தமிழக அரசு 2020-ம் ஆண்டு ஜனவரியில் தனக்கு எதிரான நடவடிக்கையை கைவிடுவது என முடிவு எடுத்தது. வழக்குப்பதிவு செய்ய கோரிதான் வழக்கு தொடரப்பட்டது. இந்த டெண்டர் வழங்கியதில் முறைகேடு என்றோ, பணிகளை செயல்படுத்தியதில் முறைகேடு என்றோ புகார் கூறப்படவில்லை. ஒளிவுமறைவற்ற முறையில் டெண்டர் கோரப்பட்டது. டெண்டர் வழங்கியதில் தனக்கு எந்தப் பங்கும் இல்லை. டெண்டர் ஒதுக்கும் குழுவிலும் தான் இடம்பெறவில்லை.

அமைச்சர் என்ற முறையில் தனக்கு எதிராகவும், டெண்டர் பெற்ற நிறுவனங்களுக்கு எதிராகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டதே தவிர, எந்த அதிகாரிகள் மீதும் வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. ஆரம்பகட்ட விசாரணையை கருத்தில் கொள்ளாமல், பணிகள் செயல்படுத்தியது தொடர்பான சிஏஜி எனப்படும் மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்து இந்நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தியுள்ளது. வழக்குப்பதிய கோரி தொடர்ந்த வழக்கில், ஆரம்பகட்ட விசாரணை நடத்த இந்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், வழக்குப் பதிவு செய்வது குறித்தும் இந்த நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டுமே தவிர மாநில அரசு அல்ல.

ஆரம்பகட்ட விசாரணைக்கு அரசின் அனுமதி தேவையில்லை. வழக்குப்பதிவு செய்யவும், புலன் விசாரணை மேற்கொள்ளவும் தான் அரசு அனுமதி வேண்டும். முதலில் ஆரம்பகட்ட விசாரணை நடத்த மட்டுமே அரசின் அனுமதி பெறப்பட்டது. அதற்கு பிந்தைய விசாரணைக்கும், வழக்குப்பதியவும் அரசின் அனுமதி பெறவில்லை. எனவே இந்த வழக்கை ரத்து செய்யவேண்டும். இந்த வழக்கு தொடர்பான முதல் தகவல் அறிக்கையில் பொய்யான குற்றச்சாட்டுக்களை தவிர வேறு எந்த ஆதாரங்களும் இல்லை" என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், முறையாக விசாரணை நடத்தாமல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போதுமான கால அவகாசம் இருந்த போதும், அவசரமாக ஏன் வழக்குப் பதிவு செய்யப்பட்டது? எனக் கேள்வி எழுப்பினர். இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டாலும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிராக புதிதாக வழக்குப் பதிவு செய்ய முடியும். குற்றச்சாட்டுக்களில் இருந்து அவரை விடுவித்துவிட முடியாது என்று தெரிவித்தனர்.

சொத்துக் குவிப்பு வழக்கை ரத்து செய்யக் கோரிய மனு மீது வேலுமணி சார்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே, "வழக்கமாக அரசு ஊழியர் மீது சொத்து குவிப்பு வழக்கு பதியும் முன், சொத்து விவரங்கள் குறித்து விளக்கம் கேட்கப்படும். ஆனால், அரசியல் காரணமாக சொத்துக்களின் விவரங்கள் குறித்து வேலுமணியிடம் எந்த விளக்கமும் கேட்கவில்லை. முதல் தகவல் அறிக்கையில் சொத்து விவரங்கள் ஏதும் இல்லை.

உறவினர்கள் மற்றும் அவர்களின் நிறுவனங்களின் வருமானத்தை அடிப்படையாக வைத்து வேலுமணிக்கு எதிராக 58 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, அந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும்" என வாதிட்டார். இதையடுத்து, தமிழக அரசுத்தரப்பு பதில் வாதத்துக்காக இந்த மனுக்கள் மீதான விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x