தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: புதுச்சேரி அரசு உத்தரவு

தாமதமாக வரும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: புதுச்சேரி அரசு உத்தரவு
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி அரசு ஊழியர்கள் தாமதமாக வருவதாக தொடர் புகாரையடுத்து இனி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து துறைகளுக்கும் புதுச்சேரி அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

புதுச்சேரியில் அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் தாமதமாக வருவதாக பொதுமக்கள் அதிகளவில் புகார் தெரிவித்து வந்தனர். ஆனால், அரசு தரப்பில் நடவடிக்கையே இல்லை. இந்நிலையில், ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி, அரசு அலுவலகங்களுக்கு காலையில் சென்று காலியாக இருக்கும் இருக்கைகளை விடியோ, புகைப்படம் எடுத்து வெளியிடத் தொடங்கினார். இதைப் பார்த்த பேரவைத்தலைவர் செல்வம், தலைமைச் செயலர் ராஜீவ்வர்மாவிடம் புகார் தெரிவித்தார். அதையடுத்து நிர்வாக சீர்திருத்தத் துறையை அழைத்து கடும் நடவடிக்கை எடுக்க தலைமைச்செயலர் உத்தரவு பிறப்பித்தார்.

அதைத்தொடர்ந்து புதுவை அனைத்து அரசு துறை செயலர்கள், துறை தலைவர்களுக்கு அரசின் சிறப்பு செயலர் கேசவன் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், "அரசு அலுவலக நேரம் தொடங்கி ஒரு மணி நேரத்திற்கு மேலாகியும், பொது சேவை சார்ந்த துறைகள் உட்பட பலவற்றில் அரசு ஊழியர்கள் இருக்கையில் காணப்படவில்லை. தாமதமாக பணிக்கு வருகின்றனர் என்று புகார்கள் வந்துள்ளன.

நேரம் தவறாமல் சரியான நேரத்துக்கு பணிக்கு வருவதன் அடிப்படையில் முழு துறையின் செயல்திறனை மக்கள் மதிப்பீடு செய்கின்றனர். அதனால் அரசு ஊழியர்கள் நேரத்துக்கு வருகை தரவும், திட்டமிடப்பட்ட அலுவலக நேரங்களில் இருக்கையில் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து அரசு துறை செயலர்கள், துறை தலைவர்கள் தங்கள் துறைகளில் திடீர் ஆய்வு செய்ய வேண்டும். சரியான நேரத்தில் பணிக்கு வராதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை பற்றி மாதந்தோறும் அறிக்கை தர வேண்டும்" என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in