தமிழக கோயில்களில் உள் பிரகாரத்தில் யாகங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது: உயர் நீதிமன்றக் கிளை உத்தரவு

உயர் நீதிமன்ற மதுரை கிளை
உயர் நீதிமன்ற மதுரை கிளை
Updated on
1 min read

மதுரை: தமிழக கோயில்களில் உள் பிரகாரத்தில் தனி நபர் யாகங்கள், சிறப்பு யாகங்கள் நடத்த அனுமதிக்கக்கூடாது என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்ட பாஜக செயலாளர் சித்ரங்கநாதன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவில்: "திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்த சஷ்டி திருவிழா 2022 அக்டோபர் 25 முதல் 2022 அக்டோபர் 30 ஆம் தேதி வரை நடைபெறும். அக்டோபர் 30 ஆம் தேதி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெறும்.

திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருப்பது வழக்கம் ஆனால், இந்த வருடம் திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் பக்தர்கள் தங்கி விரதம் இருக்க அனுமதி அளிக்கவில்லை. எனவே, திருச்செந்தூர் முருகன் கோயிலில் உள் பிரகாரத்தில் கந்த சஷ்டி விரதம் இருப்பவர்களுக்கு இடம் ஒதுக்க உத்தரவிட வேண்டும்." என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ. சத்ய நாராயண பிரசாத் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் திருச்செந்தூர், பழனி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் கோயில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோயில்களிலும் திருப்பதி கோயிலில் உள்ளது போன்ற கட்டுபாடுகளை கொண்டு வர வேண்டும்.

தமிழகத்தில் கோயில் வளாகத்திற்குள் யாகத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது. யாகங்கள் கோயிலின் வெளியே நடைபெற வேண்டும். தமிழகத்தில் இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் ஒரே மாதிரியான நடைமுறைகளை, கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்" என நீதிபதிகள் கூறினர். மேலும் மனு தொடர்பாக திருச்செந்தூர் முருகன் கோயில் இணை ஆணையர் விளக்கம் அளிக்க உத்தரவிட்டதுடன், விசாரணையை நவம்பர் 15 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in