

சென்னை: சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (அக்.27) திறந்து வைத்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: "தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.10.2022) சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவனால் வழங்கப்பட்ட பாரத ரத்னா, பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையினை திறந்து வைத்தார்.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் 14.4.2022 அன்று அம்பேத்கரின் 132-ஆவது பிறந்த நாளன்று சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவுவதற்காக இந்த சிலை வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் 14.5.2022 அன்று அம்பேத்கர் மணிமண்டபத்தில் அச்சிலையினை நிறுவுவதற்கான இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன்படி, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் அமைந்துள்ள அம்பேத்கர் மணிமண்டபத்தில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் முழு திருவுருவச் சிலையை தமிழக முதல்வர் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என். நேரு, உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.