Published : 27 Oct 2022 12:33 PM
Last Updated : 27 Oct 2022 12:33 PM

அரசு மருத்துவமனைகள் கொள்முதல் செய்யும்  விலையுயர்ந்த மருந்துகள் ஏழைகளை சென்றடைவதில்லை: உயர் நீதிமன்றம் வேதனை 

கோப்புப்படம்

சென்னை: அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை என சென்னை உயர் நீதிமன்றம் வேதனை தெரிவித்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில், கோவை அரசு மருத்துவமனை மருந்து ஸ்டோர் பொறுப்பாளராக இருந்த முத்துமாலை ராணி என்பவர், நிறுத்தி வைக்கப்பட்ட தனது ஓய்வூதிய பலன்களை வழங்கக் கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், "அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் ஏழை நோயாளிகளுக்கு காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கூறப்படுவதாகவும், கரோனா பாதிப்புக்கு பின், குரங்கு காய்ச்சல், இன்ஃப்ளூயன்ஸா மற்றும் வைரஸ் நோய்கள் தமிழகம் முழுவதும் தொடர்ந்து பரவுவதற்கான காரணம் குறித்து விளக்கம் அளிக்க அரசுக்கு உத்தரவிட்டிருந்தது. அதேபோல், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்தும் விசாரித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன் இன்று (அக்.27) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், "தமிழகத்தில் புதிது புதிதாக நோய்கள் பரவுவதற்கான காரணங்கள், மருந்து நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்த விரிவான அறிக்கை தயாரிக்கும் பணி நடந்து வருவதால், அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்" என கோரிக்கை வைக்கப்பட்டது.

இதனை ஏற்றுக் கொண்டு, வழக்கின் விசாரணையை நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, "அரசு மருத்துவமனைகளில் காலாவதியான மருந்துகள் விநியோகிப்பது என்பது தீவிரமானது. இதில் மருந்து நிறுவனங்களுக்கும், சுகாதார துறைக்கும் தொடர்பு உள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் கொள்முதல் செய்யப்படும் விலை உயர்ந்த மருந்துகள் உண்மையில் ஏழை மக்களை சென்றடைவதில்லை. ஆனால், அந்த மருந்துகள் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டதாக பதிவு செய்யப்படுவதாக" வேதனை தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x