போக்குவரத்து விதிமீறல்: சென்னையில் நேற்று ஒரு நாளில் 2,500 பேரிடம் ரூ.15 லட்சம் அபராதம் வசூல் 

கோப்புப் படம் |
கோப்புப் படம் |
Updated on
1 min read

சென்னை: சென்னையில் நேற்று ஒரு நாளில் போக்குவரத்து விதிகளை மீறிய 2500 பேரிடம் திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி ரூ.15 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்தத்தின் அடிப்படையில், சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்டிருந்த அபராதத் தொகைகளை உயர்த்தி புதிய அரசாணை தமிழக அரசு வெளியிட்டது.

இதன்படி ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட உயிர்காக்கும் வாகனங்கள் சாலைகளில் செல்லும்போது, வழிவிட தவறினால், அதற்கு இடையூறாக செயல்பட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.10 ஆயிரம், சாலைகளில் வாகனங்களை அதிவேகமாக ஓட்டி, மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பைக் ரேஸில் ஈடுபடுதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு ரூ.10 ஆயிரம், அபாயகரமான விபத்துகளை ஏற்படுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டுதல், மாசு ஏற்படுத்தும் வாகனங்கள், தடை செய்யப்பட்ட இடங்களில் தேவையற்ற ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினாலும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த புதிய அரசாணை நேற்று முதல் அமலுக்கு வந்தது. இதன்படி சென்னையில் நேற்று ஒரே நாளில் 2,500 வாகன ஓட்டிகள் மீது திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இவர்களிடம் இருந்து ரூ. 15 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in