Published : 27 Oct 2022 04:59 AM
Last Updated : 27 Oct 2022 04:59 AM

வடகிழக்கு பருவமழை அக்.29-ல் தொடங்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் 29-ம் தேதி தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் வளர்ச்சியில் தென்மேற்குப் பருவமழை, வடகிழக்குப் பருவமழை ஆகிய இரண்டும் முக்கியபங்கு வகிக்கின்றன. நடப்பாண்டில் தென்மேற்குப் பருவமழை ஜூன் 3-ம் தொடங்கி, செப்டம்பரில்நிறைவடைந்தாலும், வடமாநிலங்களில் சில இடங்களில் பருவமழை முழுமையாக விலகாமல் இருந்தது.

இந்நிலையில், தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் கடந்த23-ம் தேதி முற்றிலும் விலகியதாகஅறிவிக்கப்பட்டது. இதையடுத்து,வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தென்கிழக்கு மற்றும் அதனைஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் காரணமாக, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

மேலும், காற்றழுத்தத் தாழ்வுமண்டலம் அடுத்தடுத்து வலுவடைந்து புயலாகி வங்கதேசம் கடற்கரையைக் கடந்தது. இதையடுத்து, தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படத் தொடங்கி உள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அக்.29-ம் தேதி தொடங்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் நேற்று கூறியதாவது:

தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வடகிழக்கு பருவமழை அக்.29-ம் தேதி தொடங்கும். இதன் காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் அக்.29-ம் தேதி இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

அதேநேரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திண்டுக்கல், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய 20 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகப் பகுதிகளின் மேல், தற்போது வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று (அக்.27) மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.

அக்.30-ம் தேதி தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக் கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம். இவ்வாறு அவர் கூறினார்.

வடகிழக்கு பருவமழை காலம்: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை ஆகும். ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 2-வது அல்லது 3-வது வாரத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்குவது வழக்கம். வடகிழக்கு பருவமழையின் இயல்பான மழை அளவு 44.8 செ.மீ.கடந்த ஆண்டு (2021) வடகிழக்குப்பருவமழை அக்.21-ம் தேதி தொடங்கியது. இந்த காலகட்டத்தில் தமிழகத்தில் இயல்பைவிட 59 சதவீதம் அதிக மழை கிடைத்தது.

பெரும்பாலான இடங்களில் அக்.29-ம் தேதி இடியுடன் லேசானது முதல் கனமழை பெய்யக் கூடும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x