Published : 27 Oct 2022 04:10 AM
Last Updated : 27 Oct 2022 04:10 AM

கோவை | சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை கண்டறியும் வகையில் மாநகர காவல் உளவுத் துறையை பலப்படுத்த வலியுறுத்தல்

கோவை: கோவை மாநகரில் சந்தேக நபர்களின் நடவடிக்கைகளை முன்கூட்டியே கண்டறியும் வகையில், மாநகர காவல்துறையின் உளவுப் பிரிவை பலப்படுத்த வேண்டும் என, சமூக செயல்பாட்டாளர்கள் அரசுக்கும், காவல்துறை உயரதிகாரிகளுக்கும் வலியுறுத்தியுள்ளனர்.

கோவை மாநகர காவல்துறையில் நுண்ணறிவுப் பிரிவு எனப்படும் உளவுத்துறை (ஐ.எஸ்), சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு (எஸ்.ஐ.சி) ஆகியவை முக்கியமானதாகும். உளவுத்துறையின் சார்பில், மாநகரில் உள்ள 15 காவல் நிலையங்களுக்கும் காவலர்கள் உள்ளனர். ஒரு உதவி ஆணையர் தலைமையில், 3 ஆய்வாளர்கள், 5 உதவி ஆய்வாளர்கள், 25-க்கும் மேற்பட்ட காவலர்கள் என மொத்தம் 45 பேருடன் இப்பிரிவு இயங்குகிறது.

சிறப்பு நுண்ணறிவுப் பிரிவின் சார்பிலும் மாநகரின் 15 காவல் நிலையங்களுக்கும் காவலர்கள் உள்ளனர். இதற்கும் உதவி ஆணையர் உள்ளார். உளவுத்துறை காவலர்கள் தங்களது பகுதிக்கு உட்பட்ட இடங்களில் நடக்கும் ஆர்ப்பாட்டம், போராட்டம் போன்ற சட்டம் ஒழுங்கு பாதிப்பு தொடர்பான தகவல்களை சேகரிப்பர்.

சிறப்பு நுண்ணறிவுப் பிரிவு காவலர்கள் மத மோதல்கள், மதம் சார்ந்த விவகாரங்கள் குறித்த தகவல்களை சேகரிப்பர். இந்த தகவல்களை தங்களது உயரதிகாரிகளான உதவி ஆணையர் மூலம் மாநகர காவல் ஆணையரின் கவனத்துக்கு எடுத்துச் செல்வர்.

சமூக செயல்பாட்டாளர்கள் கூறும்போது, ‘‘மாநகர காவல்துறையின் உளவுத்துறையில் பணியாற்றி வந்த அனுபவம் மிக்க காவலர்கள் 15 பேர் சமீபத்தில் ஒரேயடியாக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டனர். அவர்களுக்கு பதில் புதிய காவலர்கள் உளவுத்துறையில் நியமிக்கப்பட்டனர். இந்த அதிரடி மாற்றம் பதற்றமான கோவை மாநகருக்கு தற்போது பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது.

உளவுத்துறையில் உள்ள காவலர்கள் களத்தில் இறங்கி மக்களோடு மக்களாக கலந்து பேசியும், தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்து அமைப்புகள், சங்கங்களின் நிர்வாகிகளோடு தொடர்பை ஏற்படுத்தி நடக்கும் தகவல்களை உடனுக்குடன் பெறுபவர்களாகவும், சிலர் தகவலாளிகள் மூலம் முன்கூட்டியே தகவல்களை சேகரிப்பவர்களாகவும், அனுபவசாலிகளாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

உளவுத்துறையில் பழையவர்களுக்கு பதில் புதியதாக வந்தவர்கள் தங்களது தகவலாளிகளை பலப்படுத்திக் கொள்ள சில காலம் அவகாசம் தேவைப்படும். ஆனால், பதற்றமான கோவை மாநகரில் அந்த அவகாசம் கிடைக்காது. எனவே, உளவுத்துறையில் இருந்து ஒருவரை மாற்றும் போது, அவருக்கு பதில் வருபவர் அதே அளவுக்கு அனுபவசாலியாகவும், தகவல்களை சேகரிப்பவர்களாகவும் இருக்க வேண்டியது அவசியம்.

மாநகர காவல்துறையின் உளவுத்துறையை தற்போதைய சூழலில் பலப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு சமீபத்திய மாதங்களாக அடுத்தடுத்து நடந்த சட்டம் ஒழுங்கு பாதிப்பு சம்பவங்களே சாட்சி. எனவே, மாநகர காவல்துறையின் உளவுத்துறைக்கு முன்கூட்டியே தகவல்களை சேகரிப்பதில் அனுபவம் வாய்ந்தவர்களை மீண்டும் நியமித்து பலப்படுத்த வேண்டும்.

உளவுத்துறை மட்டுமின்றி, சிறப்பு நுண்ணறிவுப்பிரிவு, எஸ்.பி.சி.ஐ.டி போன்றவற்றையும் முழுமையாக பலப்படுத்த வேண்டும். வாட்ஸ் அப் மூலம் வரும் தகவல்களை மட்டும் நம்பாமல், களத்துக்குச் சென்று தகவல்களை சேகரிக்கும் வகையில் அவர்களின் உளவு சேகரிக்கும் தன்மையை மேம்படுத்த தமிழக அரசும், காவல்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x