பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்: கே.எஸ்.அழகிரி

பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்: கே.எஸ்.அழகிரி
Updated on
1 min read

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்போது பிரதமர் மோடி ஏதேனும் நடவடிக்கை எடுத்திருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 2016-ம் ஆண்டு டிச.5-ம் தேதி உயிரிழந்தார். இவரது மரணம் தொடர்பாகவும், அவருக்கு அளிக்கப்பட்டுவந்த சிகிச்சை தொடர்பாகவும் விசாரணை நடத்த நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டது.

அந்த ஆணையத்தின் அறிக்கை கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆருக்கு உடல்நிலை சரியில்லாதபோது அவரை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல மருத்துவ வசதியுடன் கூடிய விமானத்தை ஏற்பாடு செய்தார் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி. இதனால்தான் எம்ஜிஆர் உயிர் பிழைத்தார். அதேபோல் பிரதமரோ அல்லது மாநில அரசில் உள்ள அமைச்சர்களோ ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். பிரதமர் மோடி நடவடிக்கை எடுத்திருந்தால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in