Published : 26 Oct 2022 06:50 AM
Last Updated : 26 Oct 2022 06:50 AM

கோவை | ஜமேஷா முபின் வீட்டில் 60 கிலோ வெடிமருந்து பறிமுதல்? - போலீஸ் கண்காணிப்பால் மிகப்பெரிய நாசவேலை தவிர்ப்பு

கோவை கார் வெடிப்பு வழக்கில் உயிரிழந்த ஜமேஷா முபின், சம்பவத்துக்கு முந்தைய நாள் இரவு வீட்டிலிருந்து கூட்டாளிகள் உதவியுடன் மர்ம பொருட்களை எடுத்துச் செல்லும் காட்சி.

கோவை: கோவையில் கார் வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து 60 கிலோ வெடிமருந்து கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. போலீஸாரின் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையால் மிகப்பெரிய நாச வேலை தடுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் டவுன்ஹால், பெரியகடைவீதி, ராஜவீதி, ஒப்பணக்கார வீதி உள்ளிட்டவை பெரிய ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள் அதிகம் உள்ள பிரதான வர்த்தக பகுதியாகும். இங்கு சாதாரண நாட்களிலேயே மக்கள் கூட்டம் அதிகம் இருக்கும். தீபாவளியை முன்னிட்டு, ஒரு வாரத்துக்கு முன்பே கூடுதல் போலீஸார் கடைவீதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது: தீபாவளிக்கு முந்தைய நாளான 23-ம் தேதி அதிகாலையில் ஜமேஷா முபின், காரில் சங்கமேஸ்வரர் கோயில் வழியாக பெரியகடை வீதி நோக்கி வந்துள்ளார். அந்த காரில் சிலிண்டருடன் வேறு சில வெடி மருந்துகளும் இருந்திருக்கலாம் எனத் தெரிகிறது. காரை மக்கள் கூட்டம் நிறைந்த பகுதியில் நிறுத்திவிட்டு தப்பிக்கலாம் என்ற திட்டத்துடன் ஜமேஷா முபின் வந்திருக்கலாம். ஆனால், அந்த சாலையில் உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீஸார் சோதனையில் ஈடுபட்டிருப்பதை பார்த்த ஜமேஷா முபின், கோயில் அருகே காரை நிறுத்திவிட்டு இறங்க முற்படும்போது சிலிண்டர் வெடித்து உயிரிழந்திருக்கலாம் அல்லது போலீஸார் தன்னை பிடித்து விடுவார்கள் என்று எண்ணி திட்டமிட்டு சிலிண்டரை வெடிக்கச் செய்திருக்கலாம். இந்த தீ விபத்தில் கார் 2 துண்டாக உடைந்து உருக்குலைந்து கிடந்தது.

கோவை கோட்டைமேடு பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் நடந்த
இடத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆணிகள்.

போலீஸ் கண்காணிப்பு இல்லாவிட்டால், மக்கள் நெருக்கம் நிறைந்த இடத்தில் காரை நிறுத்தி வெடிக்கச் செய்திருக்கலாம். இதன்மூலம் உயிரிழப்புகள் அதிகமாகியிருக்கும். போலீஸாரின் சோதனையால் நாச வேலை தடுக்கப்பட்டது என்றனர். இதற்கு முன்னரே ஒருமுறை கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த ஜமேஷா முபின் திட்டமிட்டிருந்த தகவலும் வெளியாகி உள்ளது. அவரது வீட்டில் இருந்து பொட்டாசியம் நைட்ரேட், அலுமினிய பவுடர், சார்ட் பவுடர், சல்பர் உள்ளிட்ட நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்கான பொருட்கள், வயர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. கைப்பற்றப்பட்ட வேதிப்பொருட்கள் எவ்வளவு என்பதை போலீஸார் வெளிப்படையாக தெரிவிக்காவிட்டாலும், 60 கிலோ வெடிமருந்துகள் இருக்கும் என உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x