5ஜி சேவை பெயரில் மோசடி: ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை

5ஜி சேவை பெயரில் மோசடி: ஏமாற வேண்டாம் என எச்சரிக்கை
Updated on
1 min read

சென்னை: 5ஜி சேவையைப் பெற சிம்கார்டை தரம் உயர்த்த ஓடிபி எண்கள் தேவைப்படாது. எனவே, இந்த விஷயத்தில் ஏமாற வேண்டாம் என பொதுமக்களை, தொலைத் தொடர்பு துறை எச்சரித்துள்ளது.

இதுகுறித்து, தொலை தொடர்பு துறை அதிகாரிகள் கூறியதாவது: இம்மாதம் முதல் தேதியன்று சென்னை உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் 5ஜி தொலைத் தொடர்பு சேவையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இச்சேவையை வழங்குகின்றன. இதேபோல், பிஎஸ்என்எல் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு 4ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளது. இந்நிலையில் 4ஜி, 5ஜி சேவையைப் பெறும் வகையில் பொதுமக்களுக்கு சிம்கார்டை தரம் உயர்த்தி தருவதாகக் கூறி, அவர்களிடமிருந்து ஓடிபி எண்ணை கேட்டுப் பெற்று அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை சிலர் திருடுவதாக புகார்கள் வந்துள்ளன.

சிம்கார்டை தரம் உயர்த்த ஓடிபி எண்கள் தேவையில்லை. எனவே, யாரிடமும் ஓடிபி எண்கள், பின் எண்கள் உள்ளிட்ட எவ்வித விவரங்களையும் தெரிவிக்க வேண்டாம். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள தொலைத் தொடர்பு ஆபரேட்டர்களிடம் சென்று விளக்கம் பெறலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in