Published : 23 Oct 2022 05:00 AM
Last Updated : 23 Oct 2022 05:00 AM

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை இன்று விலகுகிறது - வடகிழக்கு பருவமழை அக்.26-ல் தொடங்க வாய்ப்பு

சென்னை: நாடு முழுவதும் அனைத்து பகுதிகளில் இருந்தும் 23-ம் தேதிக்குள் தென்மேற்குப் பருவமழை விலகுவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வழக்கமாக தென்மேற்கு பருவமழை விலகியதுமே தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தொடங்கும். இந்த ஆண்டு 23-ம் தேதி தென்மேற்கு பருவமழை விலகினாலும், தென்கிழக்கு, அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காற்று வீசும் திசை மாறியுள்ளது. அதனால் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையத்தால் அறிவிக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும். பின்னர் வடக்கு- வடகிழக்கு திசையில் நகர்ந்து மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் 24-ம் தேதி காலை புயலாக வலுப்பெறக் கூடும். அதன்பின்னர் வடக்கு - வடகிழக்கு திசையில் நகர்ந்து 25-ம் தேதி அதிகாலை வங்கதேச கடற்கரையில் டிங்கோனா தீவு மற்றும் சந்திவிப் இடையே கரையைக் கடக்கும். அதன் பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் இந்த புயல் கடல் பரப்பில் இருந்த ஈரப்பதம் முழுவதையும் ஈர்த்துக் கொண்டு சென்றுவிடும் என்பதால், வடகிழக்கு பருவமழை தொடங்கினாலும் வலுவாக இருக்காது என தெரிகிறது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் கூறியதாவது:

புயலால் காற்று வீசும் திசையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. புயல் வலுவிழந்த பிறகுதான் இயல்பு நிலைக்கு திரும்பும். அதன்பிறகே வடகிழக்கு பருவமழை தொடங்குவது தொடர்பாக அறிவிக்கப்படும். புயல் ஈரப்பதத்தை ஈர்த்துக்கொண்டு செல்வதால் பருவமழை வலுவாக தொடங்குமா என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும்.

4 நாட்கள் மழை

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் 23-ம் தேதி பெரும்பாலான இடங்களிலும், 24, 25-ம் தேதிகளில் ஒருசில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 26-ம் தேதி ஒருசில இடங்களில் மிதமான மழை பெய்யக் கூடும்.

சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும்.

22-ம் தேதி காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி, விருதுநகர் மாவட்டம் சாத்தூர், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் ஆகிய இடங்களில் தலா 6 செமீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x