Published : 23 Oct 2022 11:50 AM
Last Updated : 23 Oct 2022 11:50 AM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 3 ஐபிஎஸ்களிடம் விளக்கம் கேட்க முடிவு

சென்னை

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 3 ஐபிஎஸ் அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்துள்ளது.

தூத்துக்குடியில் 2018 மே மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடந்தது. அப்போது, போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது.

விசாரணை ஆணைய அறிக்கை கடந்த 18-ம் தேதி சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. அதில், அப்போதைய தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், 3 ஐபிஎஸ் அதிகாரிகள் உட்பட 17 போலீஸார் மற்றும் 3 வருவாய்த் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அனைவர் மீதும் நடவடிக்கை: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை அறிக்கையின் மீதுசட்டப்பேரவையில் நடந்த விவாதத்தின்போது, அப்போது முதல்வராக இருந்த பழனிசாமி உட்பட தவறு செய்த அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்என்று உறுப்பினர்கள் வலியுறுத்தினர். யார் யார் குற்றவாளிகளோ, அவர்கள் கூண்டில் ஏற்றப்படுவார்கள் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்திருந்தார்.

துப்பாக்கிச் சூட்டின்போது மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணியில் இருந்த 4 போலீஸார் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அதன் தொடர்ச்சியாக, சம்பவத்தில் தொடர்பு உடையதாக கருதப்படும், தற்போது சென்னையில் பணியாற்றி வரும் ஐபிஎஸ் அதிகாரிகள் 3 பேரிடம் விளக்கம் கேட்க தமிழக உள்துறை முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x