Last Updated : 22 Oct, 2022 05:29 PM

2  

Published : 22 Oct 2022 05:29 PM
Last Updated : 22 Oct 2022 05:29 PM

பிரதமரின் திட்டங்களால் இந்திய பொருளாதார வளர்ச்சி சாத்தியமானது: மத்திய இணை அமைச்சர் புகழராம்

நிகழ்வில் நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் , ஆளுநர் தமிழிசை

புதுச்சேரி: பிரதமரின் திட்டங்களால் உலக அளவில் இந்திய நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது என மத்திய நிதித்துறை இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் தெரிவித்தார்.

பிரதமரின் தீவிர வேலை வாய்ப்பு இயக்கத்தையொட்டி நாடு முழுவதும் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 75,000 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, சென்னை மண்டல அஞ்சல் துறை சார்பில் புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில் இன்று நடைபெற்ற விழாவில் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கலந்துகொண்டு புதிதாக தேர்வு செய்யப்பட்ட 57 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார். இணைய வழியில் பிரதமர் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பகவத் கிஷன்ராவ் கரட், சட்டப்பேரவைத் தலைவர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், சாய் ஜெ சரவணன்குமார், எம்பி செல்வகணபதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மத்திய நிதித் துறை இணை அமைச்சர் பகவத் கிஷன் ராவ் கரட் பேசியது: ‘‘புதுச்சேரி வரலாற்று சிறப்புமிக்க யூனியன் பிரதேசம். இது இந்தியாவில் வளர்ந்து வரும் பிரதேசமாகவும் உள்ளது. 2014 முதல் பிரதமர் மோடி பல்வேறு துறைகளில் வளர்ச்சி பணிகளை முடுக்கிவிட்டுள்ளார். அவருடைய வழிகாட்டுதலின் பேரில் நிறைய வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. கடைநிலையில் உள்ள ஏழ்மையான மக்களுக்கும் திட்டங்கள் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

நிதித்துறையை பொறுத்தவரை எல்லோருக்கும் வங்கி சேவை கிடைக்க வேண்டும். வங்கி கடனுதவி மக்களை சென்றடைய வேண்டும். மக்களின் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் ஆகிய மூன்று விஷயங்களில் கவனம் செலுத்தப்படுகிறது. ஜன்தன் வங்கி கணக்கு திட்டத்தின் மூலம் 57 கோடி வங்கி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. அடல் பென்ஷன் திட்டம், சுரக்‌ஷா பீமா யோஜனா போன்ற புதுவிதமான திட்டங்களை பிரதமர் செயல்படுத்தியுள்ளார்.

வியாபாரிகளின் வளர்ச்சிக்கு முக்கிய திட்டமாக முத்ரா திட்டம் இருக்கிறது. இத்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தமின்றி ரூ.10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக ரூ.20 லட்சம் வரை கடன் வாங்கி சிறு வியாபாரிகள் பொருளாதார உயர்வு பெறுகின்றனர். பிரதமரின் இதுபோன்ற திட்டங்களால் உலக அளவில் இந்திய நாடு பொருளாதார வளர்ச்சி அடைந்து வருகிறது. இதற்கு காரணம் மத்திய அரசின் வலுவான தலைமைதான். கடந்த 2 ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்றால் உலக அளவில் பாதிப்பு இருந்தது. அப்போது பிரதமரின் வழிகாட்டுதலால் இந்தியா முன்னேறியது. கரோனாவுக்கு பிறகு நாட்டின் பொருளாதாரம் வேகமாக மீண்டு வருகிறது.

மத்திய நிதி அமைச்சரும் சிறு குறு, நடுத்தர தொழில் வளர்ச்சிக்கு ரூ.4 லட்சம் கோடியும், பொது சுகாதார வளர்ச்சிக்கு ரூ.50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கி வளர்ச்சி பணிகளை மேற்கொண்டார். அதனால் பொருளாதாரம் உயர்ந்து வருகிறது. தற்போது இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கொடுக்கும் சிறப்பான திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார். இதுபோன்ற திட்டங்களால் இந்தியா வேகமாக வளர்ச்சி பெற்று வருகிறது. நகர்ப்புறம், கிராமப்புறம் என அனைத்து பகுதிகளும் சரி சமமாக வளர வேண்டும் என்ற நோக்கில் திட்டங்களை பிரதமர் செயல்படுத்தி வருகிறார்.

புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனை இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இளைஞர்களுக்கு இந்த வேலைவாய்ப்பை பயன்படுத்தி சீறிய முறையில் பணியாற்றினால் நாடும் வளர்ச்சி பெறும். புதுச்சேரி உட்கட்டமைப்பு வசதிக்காக ரூ.1,400 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இதனால் புதுச்சேரி வளர்ச்சி பெறும். புதுச்சேரியில் 10 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. இதனால் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும்’’ என்று அவர் பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x