Published : 22 Oct 2022 06:59 AM
Last Updated : 22 Oct 2022 06:59 AM

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது

தீபாவளியை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது. சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம். படம்: ம.பிரபு

சென்னை: தீபாவளியை முன்னிட்டு சென்னை உட்பட தமிழகம் முழுவதிலும் சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது. தீபாவளி பண்டிகை வரும் 24-ம் தேதி திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்களும் சொந்த ஊர் செல்ல வசதியாக, அக்.21, 22, 23-ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்ற போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் அறிவித்திருந்தார்.

அதன்படி, சென்னையில் இருந்து வழக்கமான பேருந்துகளுடன் 4,218 சிறப்பு பேருந்துகள், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் இருந்து முக்கிய நகரங்களுக்கு 6,370 சிறப்பு பேருந்துகள் என 3 நாட்களிலும் மொத்தம் 10,588 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கம் நேற்று தொடங்கியது.முதல் நாளான நேற்று, சென்னையில் இருந்து வழக்கமான 2,100 பேருந்துகளுடன், 1,437 சிறப்பு பேருந்துகளும், மற்ற பகுதிகளில் 1,765 சிறப்பு பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

சென்னையை பொருத்தவரை கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டுமின்றி, மாதவரம், தாம்பரம் மெப்ஸ், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பைபாஸ் மாநகராட்சி பேருந்து நிறுத்தம், கே.கே.நகர் மாநகர போக்குவரத்து கழக பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்பட்டன. தீபாவளிக்காக சொந்த ஊர்செல்லும் ஏராளமான பயணிகள் நேற்று பிற்பகல் முதலே கோயம்பேடு உள்ளிட்ட முக்கிய பேருந்து நிலையங்களில் குவிந்தனர். ஆம்னிபேருந்து நிலையத்திலும் நெரிசல்காணப்பட்டது. அங்கு அதிக கட்டணம் உள்ளிட்ட விதிமீறல்கள் நடக்கிறதா என போக்குவரத்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

சென்னையில் வசிக்கும் தென் மாவட்ட மக்கள் பேருந்து,
கார் உள்ளிட்ட வாகனங்களில் சொந்த ஊர் புறப்பட்டதால்,
தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசல்.
படம்: எம்.முத்துகேணஷ்

அமைச்சர் ஆய்வு: கோயம்பேடு பேருந்து நிலையத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேற்று ஆய்வுமேற்கொண்டார். பேருந்தில் ஏறிபயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இரவு 7 மணி நேர நிலவரப்படி, சென்னையில் இருந்து 91 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். சொந்த ஊர் செல்ல இதுவரை 1.04 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். போக்குவரத்து துறை ஆணையர் இல.நிர்மல்ராஜ், விரைவுபோக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் கே.இளங்கோவன், மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அ.அன்பு ஆபிரகாம் உடன் இருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x