

சென்னை: தீபாவளி பண்டிகையை மக்கள் விபத்து இன்றி பாதுகாப்பாகவும், ஒலி மற்றும் காற்று மாசற்ற வகையிலும் கொண்டாட வேண்டும் என்றுமாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று காலை 6 முதல் 7 மணி வரை, இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
அதனடிப்படையில், சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில்சுற்றுச்சூழலை பேணிக் காக்க, பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடியபசுமைப் பட்டாசுகளை மட்டுமேவெடிக்க வேண்டும். மாநகராட்சி முன்அனுமதியுடன் பொதுமக்கள் திறந்தவெளியில் பட்டாசுகளை வெடிப்பதற்கு அந்தந்த பகுதிகளில் உள்ள நலச்சங்கங்கள் மூலம் முயற்சிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது. பட்டாசு குப்பைகளை மற்ற எந்த குப்பைகளுடனும் கலக்காமல் தினந்தோறும் வகைப்படுத்தி, குப்பையை பெற வரும் மாநகராட்சி தூய்மைப் பணியாளர்களிடம் தனியாக ஒப்படைக்க வேண்டும். பட்டாசு குப்பைகள் தனியாக சேகரிக்கப்பட்டு, கும்மிடிப்பூண்டியில் உள்ள அபாயகரமான கழிவுகளை அழிக்கும் நிலையத்துக்கு அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பசுமை பட்டாசுகள்: பொதுமக்கள் குறைந்த ஒலியுடன் கூடிய பசுமைப் பட்டாசுகளைமட்டுமே வெடிக்க வேண்டும். அதிகஒலி எழுப்பும், தொடர்ச்சியாக வெடிக்கக்கூடிய சரவெடிகளை தவிர்க்கவேண்டும். மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள் மற்றும் அமைதிகாக்கப்படும் இடங்களிலும், குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகிலும் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். தீபாவளி பண்டிகையை மக்கள் விபத்து இன்றி பாதுகாப்பாகவும், ஒலி மற்றும் காற்று மாசற்ற வகையிலும் கொண்டாட வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.