Published : 21 Oct 2022 03:18 PM
Last Updated : 21 Oct 2022 03:18 PM

மயிலாடுதுறை மீனவர் சுடப்பட்ட சம்பவம்: விசாரணைக்கு இந்திய கடற்படை உத்தரவு

காயமடைந்த மீனவர் | படம்: எல்.பாலச்சந்தர்

சென்னை: மயிலாடுதுறை மீனவர்களை வீரர்கள் சுட்டது தொடர்பாக இந்திய கடற்படை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கோடியக்கரை அருகே வங்கக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மயிலாடுதுறை மாவட்ட மீனவர்கள் மீது இந்திய கடற்படையினர் தவறுதலாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் வீரவேல் என்ற மீனவர் படுகாயம் அடைந்திருக்கிறார்.

இது குறித்து ராணுவ மக்கள் தொடர்பு தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இன்று இந்தியா - இலங்கை சர்வதேச கடல் எல்லைப் பகுதியில் இந்திய கடற்படை கப்பல் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தது. அப்போது சந்தேகத்திற்குரிய படகு ஒன்று காணப்பட்டது. பல முறை எச்சரித்தும் படகு நிற்கவில்லை.

வழிகாட்டு நெறிமுறைகள்படி, படகை நிறுத்த துப்பாக்கியால் சுடப்பட்டது. இதில் படகில் இருந்த ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. காயம் அடைந்த நபருக்கு கப்பலில் முதலுதவி அளிக்கப்பட்டு, கடற்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு கடற்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டு, அங்கிருந்து ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரின் உடல் நிலை சீராக உள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.

— Defence PRO Chennai (@Def_PRO_Chennai) October 21, 2022

முதல்வர் ரூ.2 லட்சம் அறிவிப்பு

இந்தியக் கடற்படையினரால் சுடப்பட்ட மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சம் வழங்கவும், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், "மயிலாடுதுறை மாவட்டம், வானகிரி கிராமத்தைச் சேர்ந்த காசிராஜன் என்பவரது மகன் மீனவர் வீரவேல், இன்று காலை இந்திய கடற்படையினரால் சுடப்பட்டதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்து, மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். சம்பவத்தில் காயைமடைந்த வீரவேல், சிகிச்சைக்காக உடனடியாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெற்று வரும் மீனவர் வீரவேலுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளதோடு, அவருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூபாய் இரண்டு லட்சமும் வழங்க உத்தரவிட்டுள்ளேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x