Published : 21 Oct 2022 07:01 AM
Last Updated : 21 Oct 2022 07:01 AM

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்: சென்னையில் 6 இடங்களில் பேருந்து நிலையங்கள்

சென்னை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்றுமுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகளில் சொந்த ஊர்களுக்குச் செல்ல 94 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் முன்பதிவு செய்துள்ளனர். தீபாவளி பண்டிகைக்கு ஆண்டுதோறும் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான சிறப்புப் பேருந்துகள் இயக்கம் தொடர்பான அறிவிப்பை கடந்த 10-ம் தேதி போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் வெளியிட்டார்.

அதன்படி, அக்.21 (இன்று), 22, 23 ஆகிய நாட்களில் சென்னையில் இருந்து 4,218 சிறப்புப் பேருந்துகள், பிற இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கு 6,370 பேருந்துகள் என மொத்தம் 10,588 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அரசுப் பேருந்துகளில் சென்னையில் இருந்து பயணிக்க சுமார் 53 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும், பல்வேறு ஊர்களில் இருந்து பிற ஊர்களுக்கு பயணிக்க 41 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரும் முன்பதிவு செய்துள்ளனர்.

அக்.21, 22, 23 ஆகிய நாட்களில் 2 ஆயிரம் ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு முடிவடைந்துள்ளது. இந்நிலையில், ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க மண்டலம்தோறும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தக் குழுக்கள் மூலம் பேருந்து நிலையங்கள் மட்டுமின்றி ஆங்காங்கே ஆம்னி பேருந்துகளை நிறுத்தி, சோதனையிட்டு, அதிக கட்டணம் உள்ளிட்ட விதிமீறலின் கீழ் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள முக்கிய பேருந்து நிலையங்களில் முன்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, www.tnstc.in என்ற இணையதளம் மற்றும் tnstc செயலி வாயிலாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம் என போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

340 மாநகர பேருந்துகள்: சென்னையை பொறுத்தவரை கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் சானடோரியம், தாம்பரம் ரயில் நிலைய பேருந்து நிறுத்தம், பூவிருந்தவல்லி பைபாஸ் பேருந்து நிறுத்தம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்து நிலையங்களை பல்வேறு பகுதிகளில்இருந்து இணைக்கும் வகையில் 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதற்காக 340 சிறப்புப் பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்துக் கழகம் ஏற்பாடு செய்துள்ளது. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 10 மையங்களும், தாம்பரம் சானடோரியத்தில் 1 முன்பதிவு மையமும் அமைக்கப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து சொந்த வாகனங்களில் செல்வோர் தாம்பரம், பெருங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்த்து திருப்போரூர் - செங்கல்பட்டு அல்லது பெரும்புதூர் - செங்கல்பட்டு வழியாக செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

புகார் தெரிவிக்க... பேருந்து இயக்கம் பற்றி அறிய மற்றும் புகார் தெரிவிக்க 94450 14450, 94450 14436 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். அதேபோல, ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் தொடர்பான புகார்களுக்கு 1800 425 6151, 044 2474 9002, 2628 0445, 2628 1611 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஆம்னி பேருந்துகளை கண்காணிக்க மண்டலம்தோறும் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் அடங்கிய குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x