Published : 21 Oct 2022 06:27 AM
Last Updated : 21 Oct 2022 06:27 AM

மருத்துவ படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வு: அரசுப் பள்ளி மாணவர்கள் 565 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு பிரிவு கலந்தாய்வு, சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. கலந்தாய்வில் பெற்றோருடன் பங்கேற்ற மாணவர்கள். படங்கள்: பு.க.பிரவீன்

சென்னை: மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை கலந்தாய்வில், சிறப்பு உள் ஒதுக்கீட்டின்கீழ் அரசுப் பள்ளி மாணவர்கள் 565 பேருக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன,

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 2022-23 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் சிறப்புப் பிரிவு மாணவர்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் இடஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நேரடி முறையிலும், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஆன்லைனிலும் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் நடைபெற்ற சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வில் 65 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.

இந்நிலையில், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீடு கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது. 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் 459 எம்பிபிஎஸ் இடங்கள், 106 பிடிஎஸ் இடங்கள் என மொத்தம் 565 இடங்கள் உள்ளன. இதற்கான கலந்தாய்வில் பங்கேற்க 2,674 பேர் தகுதி பெற்றதில், 1,195 பேர் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் தகுதியான மாணவ, மாணவிகளுக்கு 565 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் இடங்களை பெற்ற மாணவர்களுக்கான கல்லூரி சேர்க்கை ஆணையை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று வழங்கினார்.

7.5 சதவீத உள் ஒதுக்கீடு தரவரிசையில்
முதல் மதிப்பெண் பெற்ற ஈரோடு
மாணவி தேவதர்சினி தனது தாயாருடன்.

சாதித்த அண்ணன் - தங்கை: திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம் – தனலட்சுமி தம்பதிக்கு, தாசப்பிரகாசம் மற்றும் தேவப்பிரியா என 2 பிள்ளைகள். ராமலிங்கம் ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பிள்ளைகள் இருவரும் அரசுப் பள்ளியில் படித்தனர். தாசப்பிரகாசம் 2021–22 கல்வியாண்டில் பிளஸ் 2 படித்து, டாக்டராக வேண்டும் என்ற கனவுடன் கடந்த ஆண்டு நீட் தேர்வு எழுதினார். அதில், 181 மதிப்பெண்கள் பெற்றார். இதனால், சேலத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் நீட் தேர்வு பயிற்சி பெற்றார். தற்போது நடந்த நீட் தேர்வில் 439 மதிப்பெண்கள் பெற்றார். அரசுப் பள்ளியில் படித்ததால், 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சீட் பெற விண்ணப்பித்தார். தரவரிசைப் பட்டியலில் 10-வது இடத்தை பிடித்தார். அதேபோல, அவரது தங்கை தேவப்பிரியா, கடந்த கல்வியாண்டில் பிளஸ் 2 முடித்து, பள்ளியில் வழங்கிய நீட் பயிற்சியில் பங்கேற்றார். நடப்பு கல்வியாண்டில் நீட் தேர்வு எழுதிய அவர், 332 மதிப்பெண்கள் பெற்றார். தேவப்பிரியா, 7.5 சதவீத உள்ஒதுக்கீடு தரவரிசை பட்டியலில் 167-வது இடம்பிடித்தார்.

ஒரே பயிற்சி மையம்: சேலம் மாவட்டத்தில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் படித்த அரசுப் மாணவர்களில், 100-க்கும் அதிகமானோர் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இவர்கள் அனைவரும் 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சீட் பெற விண்ணப்பித்தனர். இதற்கான தரவரிசைப் பட்டியலில் அந்த பயிற்சி மையத்தில் படித்த சிவக்குமார், தாசப்பிரகாசம் ஆகிய மாணவர்கள் முறையே 8 மற்றும் 10 இடத்தைப் பிடித்தனர். மொத்தமாக அந்த பயிற்சி மையத்தில் படித்த 55 பேருக்கு நேற்று மருத்துவப் படிப்புக்கான இடங்கள் கிடைத்தன. அதில், 48 பேர் எம்பிபிஎஸ் படிப்பையும், 7 பேர் பிடிஎஸ் படிப்பையும் தேர்வு செய்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x