

சென்னை: தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் நேற்று விடுத்த அறிக்கை: தூத்துக்குடியில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தில் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் உட்படபலர் பொறுப்பற்ற வகையிலும், மனிதநேயம் இல்லாமலும் செயல்பட்டுள்ளனர் என நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் குற்றம் சாட்டியுள்ளது. அதேவேளை, தங்களுக்கு மேலே இருக்கும்உயரதிகாரிகளை இவர்கள் சிறிதளவுகூட கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டுள்ளனர் என்பது அப்பட்டமாகத் தெரிகிறது.
குற்றவாளிகள் அனைவரும்உறுதியாகத் தண்டிக்கப்படுவார்கள் என முதல்வர் ஸ்டாலின்சட்டப்பேரவையில் அறிவித்திருப்பதை வரவேற்கிறேன். அதே நேரம், போராட்டத்தை முன்னின்று நடத்தியவர்களில் பலர் குறிபார்த்து சுடப்பட்டுள்ளனர். அவர்கள் மீது இத்தகைய வன்மம் அதிகாரிகளுக்கு ஏற்படுவதற்கு நிச்சயமாக ஏதோ பின்னணி இருக்க வேண்டும். ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகத்துக்கும் இச்சம்பவத்துக்கும் ஏதேனும் தொடர்பு உண்டா என்பதும் முழுமையாக ஆராயப்பட்டு உரிய நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும்.