Published : 20 Oct 2022 08:40 PM
Last Updated : 20 Oct 2022 08:40 PM

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் வழக்கு: உயர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு

சென்னை: சிபிஐ தொடர்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவராக இல்லை என்றாலும், சட்ட விரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு தொடர முடியும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த 2008-ம் ஆண்டு குளோபல் டிரேடு பேங்க் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் போலி ஆவணங்களைக் கொடுத்து ரூ.15 கோடி கடன் பெற்றதாக ஜி.சீனிவாசன், ஆர்.மனோகரன் மற்றும் வங்கி மேலாளர் எஸ்.அறிவரசு உள்ளிட்ட பலர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த ரூ.15 கோடியில் ரூ. 1.07 கோடிக்கு புதுக்கோட்டை என்ற கிராமத்தில் பி.வெங்கடாச்சலபதி, பி.ராஜேந்திரன் மற்றும் கே.விக்னேஷ் ஆகியோரது பெயர்களில் ஜி.சீனிவாசன் 166 ஏக்கர் நிலம் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை தனியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்ட விரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தி்ன் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்நிலையில், தனக்கு எதிராக சிபிஐ வழக்குப் பதிவு செய்யாத நிலையில், அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருப்பதை ரத்து செய்யக்கோரி பி.ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி. டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சரத் சந்திரன் ஆஜராகி, "மனுதாரர் எந்தவொரு வங்கி மோசடியிலும் ஈடுபடவில்லை. மேலும் மனுதாரர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்யாத நிலையில், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரிப்பது சட்ட விரோதம்" என்று வாதிட்டார்.

அப்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர் என்.ரமேஷ் , "சிபிஐ பணமோசடி தொடர்பான குற்றத்தை மட்டுமே விசாரிக்கும். அந்தப் பணத்தின் மூலமாக யார், யார் பலன் அடைந்துள்ளனர், அந்த குற்றப் பணம் எதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது, யார் பதுக்கலில் ஈடுபட்டுள்ளனர் என்பதை கண்டுபிடித்து, அந்தப் பணத்தை பறிமுதல் செய்து அரசின் கஜானாவி்ல் ஒப்படைக்கும் சிறப்பு அமைப்புதான் அமலாக்கத் துறை.

ஒரு குற்றச் செயலின் மூலமாக மோசடியாக பெறப்பட்ட பணத்தின் மூலமாக மனுதாரர் பெயரில் சொத்து வாங்கப்பட்டுள்ளது. ஆகவே மனுதாரர் இந்த குற்றச் செயலுக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ உடந்தையாக செயல்பட்டுள்ளார் என்பதால்தான் அவர் மீது அமலாக்கத் துறை சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கிறது. இதில் எந்த விதிமீறலும் இல்லை" என்று வாதிட்டார்.

இந்த வாதத்தை ஏற்ற நீதிபதிகள், "மனுதாரர் சிபிஐ தொடர்ந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நபராக இல்லை என்றாலும், அந்த குற்றத்தின் மூலமாக பெறப்பட்ட தொகையில் மனுதாரர் பெயரில் சொத்துகள் வாங்கப்பட்டுள்ளது. எனவே அவர் மீது சட்டவிரோத பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்திருப்பது சட்டவிரோதம் அல்ல” எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x