Published : 20 Oct 2022 02:29 PM
Last Updated : 20 Oct 2022 02:29 PM

அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழகம் 3-ம் இடம்: பிரதமரிடம் விருது பெற்ற அமைச்சர்

பிரதமர் மோடியிடம் விருதுபெறும் அமைச்சர் தா.மோ.அன்பரசன்

சென்னை: மத்திய அரசின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய அளவில் தமிழகம் 3-ம் இடம்பிடித்துள்ளது. இதற்கான விருதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றுக் கொண்டார்.

இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி: "ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறையின் மூலம் செயல்படுத்தப்படும் அனைவருக்கும் வீடு திட்டத்தில் சிறப்பாக செயல்பட்டமைக்கு தேசிய அளவில் 3ஆம் இடம் பிடித்த தமிழ் நாட்டிற்கு, குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் அக்.19 அன்று நடைபெற்ற விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடமிருந்து குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் விருதினை பெற்றார்.

இந்தியப் பிரதமரின் அனைவருக்கும் வீட்டு வசதி திட்டத்தை (நகர்ப்புறம்) சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பயனாளிகளை அங்கீகரிப்பதற்காக ஒன்றிய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற துறையால், "பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா விருதுகள் - 2021 மற்றும் 150 நாட்கள் சவால்கள்" என்ற அடிப்படையில், மாநிலம், மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளுக்கான விருதுகளும், சிறப்புப் பிரிவு விருதுகளும், பயனாளிகளுக்கான விருதுகள் என மூன்று பிரிவுகளில் விருதுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேற்கண்ட விருதுகளில் சிறப்பாக செயல்பட்ட மாநிலம் என்ற பிரிவில் தமிழகம் 3 ஆவது இடத்தையும், மாநகராட்சிகளில் மதுரை மாநகராட்சிக்கு 3 ஆவது இடமும், பேரூராட்சிகள் பிரிவில் கோவை மாவட்டம், பெரிய நெகமம் பேரூராட்சிக்கு 5 ஆவது இடமும் பிடித்து விருதுகள் பெற்றுள்ளன.

இவ்விழாவில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சருடன், வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சி துறை செயலர் ஹித்தேஷ் குமார் மக்வானா, வாரிய மேலாண்மை இயக்குநர் ம.கோவிந்தராவ், ஆகியோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x