Published : 17 Oct 2022 04:35 AM
Last Updated : 17 Oct 2022 04:35 AM

102 அடியை எட்டும் பவானிசாகர் அணை: உபரி நீர் திறப்பால் வெள்ள அபாய எச்சரிக்கை

ஈரோடு

பவானிசாகர் அணையின் நீர்மட்டம்மீண்டும் 102 அடியை எட்டவுள்ளதால், அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால், பவானி ஆற்றின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பவானிசாகர் அணையில் 105 அடி வரை நீரை தேக்க முடியும். இருப்பினும், அணையின் பாதுகாப்பு விதிமுறைகளின்படி, 102 அடி வரை மட்டுமே நீரை தேக்கி வைக்க முடியும். கடந்த மாதம் 102 அடியை எட்டியதும், பவானி ஆற்றில் ஒரு லட்சம் கன அடிக்கு மேல் தொடர்ச்சியாக உபரி நீர் திறக்கப்பட்டது. 52 நாட்களுக்கு அணையின் நீர்மட்டம் 102 அடியாக நீடித்தது.

இந்நிலையில், அணைக்கான நீர் வரத்து குறைந்ததாலும், பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டதாலும் அணையின் நீர்மட்டம் சரிந்தது. தற்போது நீர்ப்பிடிப்புப் பகுதிகளில்கனமழை பெய்து வருவதால் அணைக்கான நீர் வரத்து அதிகரித்துள்ளது.

நேற்று மாலை 6 மணி நிலவரப்படி, பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101.80 அடியாக இருந்தது. அணைக்கு விநாடிக்கு 3,619 கன அடி நீர் வரத்து இருந்த நிலையில், அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்துக்கு விநாடிக்கு 1,300 கன அடியும் பவானி ஆற்றில் 100 கன அடியும் நீர் திறக்கப்படுகிறது.

இதனிடையே, அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியதும்,ஆற்றில் உபரி நீர் திறக்கப்படவுள்ளது. எனவே, பவானி ஆற்றின் கரையோரத்திலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x