Published : 23 Nov 2016 10:32 AM
Last Updated : 23 Nov 2016 10:32 AM

மின் உற்பத்தியில் தமிழகத்துக்கு கை கொடுத்த காற்றாலைகள்: ஸ்மார்ட் கிரிட் திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வருமா?

இந்தியாவில் ஏறத்தாழ 25 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. அவற்றில் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்டவை தமிழகத்தில் உள்ளன. இவற்றின் மூலம் அதிகபட்சமாக 7,690 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்.

எனினும், அனைத்துப் பகுதி களிலும் காற்றின் வேகம் சீராக இருக்காது என்பதால், முழு மையான அளவுக்கு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாது. நடப்பாண்டில் அதிகபட்சமாக ஒரே நேரத்தில் 4,906 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, திண்டுக்கல், கோவை, திருப்பூர் மாவட்டங்களில்தான் காற்றாலைகள் உள்ளன. காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் மே மாதம் முதல் செப்டம்பர் வரை அதிக அளவு காற்றாலை மின்சாரம் உற்பத்தியாகும். கடந்த ஆண்டு 6 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் உற்பத்தியானது. ஆனால், நடப்பாண்டில் மழை குறைவாக இருந்தபோதிலும், காற்று கைகொடுத்துள்ளது.

கடந்தமார்ச் முதல் அக்டோபர் வரையி லான 8 மாதங்களில் மட்டுமே 11 ஆயிரம் மில்லியன் யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தின் மொத்த மின் தேவையில் 13 முதல் 15 சத வீதத்தை காற்றாலைகள் பூர்த்தி செய்கின்றன.

கடந்த ஆண்டு மாநிலத்தின் மின் தேவை 88 மில்லியன் யூனிட்டாக இருந்தது. நடப்பாண்டில் அதுமேலும் 8 சதவீதம் கூடுதலாகி யுள்ளது. இதுவரை 70 மில்லியன் யூனிட் மின்சாரத்தை தமிழகம் பயன்படுத்தியுள்ளது. அதில், காற்றாலைகளின் பங்கு மட்டும் 11 மில்லியன் யூனிட் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் நடப்பாண்டில் பெரிய அளவுக்கு மின் பற்றாக்குறைப் பிரச்சினை ஏற்படவில்லை.

இதுகுறித்து இந்திய காற்றாலைகள் சங்கத் தலைவர் கே.கஸ்தூரி ரங்கையன் ‘தி இந்து’விடம் கூறியதாவது:

தமிழகத்தில் 130 துணை மின்நிலையங்களுடன் 12 ஆயிரம்காற்றாலைகள் இணைக்கப்பட் டுள்ளன. நடப்பாண்டின் தொடக்கத்தில் அனைத்து மின் நிலையங் களிலும் உள்ள மீட்டர்களில் ‘சிம் கார்டு’ பொருத்தினோம். அதன் மூலம் எவ்வளவு மின்சாரம் கிடைக்கிறது என்பதை துல்லியமாக அளவிட முடியும். அதுமட்டுமின்றி, அடுத்த 24 மணி நேரத்துக்கு எவ்வளவு மின்சாரத்தை வழங்க உள்ளோம் என்றும் தெரிவித்தோம். இது, தமிழக மின்வாரியத்துக்குப் பெரிதும் உதவியாக இருந்துள்ளது.

கே. கஸ்தூரி ரங்கையன்

குறைந்த விலையில், சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத மின்சாரத்தை வழங்கும் காற்றாலை களின் மேம்பாட்டுக்கு அரசு உதவ வேண்டும். ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் போல, ‘ஸ்மார்ட் கிரிட்’ திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும். மின்சேமிப்பு நிலையங்களில் அடிப் படைக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தல், 24 மணி நேரமும் மின்சாரத்தை பெற்று, மக்களுக்கு தடையின்றி, சீரான மின்சாரத்தை வழங்குதல், திறமையான நிர்வாகம் ஆகியவை ‘ஸ்மார்ட் கிரிட்’ திட்டத்தில் செயல்படுத்தப்பட வேண்டும்.

மின் விநியோகத்தின்போது ஏறத்தாழ 18 முதல் 20 சதவீதம் வரை மின்சாரம் வீணாகிறது. வெளிநாடுகளில் 4 முதல் 6 சதவீதம் மட்டுமே வீணாவது குறிப் பிடத்தக்கது. எனவே, மின்சாரம் வீணாவதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

மலிவான மின்சாரம்

காற்றாலை மின்சாரத்துக்கு சராசரியாக ஒரு யூனிட்டுக்கு ரூ.3.05 வழங்கப்படுகிறது. அனல் மின்சாரம் வாங்க ரூ.4 முதல் ரூ.7 வரை செலவிடப்படுகிறது. நீர் மின்சாரம் மற்றும் அணு மின்சாரம் முற்றிலும் அரசால் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது. எனினும், அனைத்திலும் மலிவாகக் கிடைப்பது காற்றாலை மின்சாரம்தான் என்கிறார்கள் காற்றாலை உரிமையாளர்கள்.

நிலுவைத் தொகை வழங்கப்படுமா?

கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தில் புதிதாக காற்றாலைகள் நிறுவப்படவில்லை. காற்றாலைகள் வழங்கும் மின்சாரத்துக்கு உரிய தொகையை, அவற்றின் உரிமையாளர்களுக்கு உரிய நேரத்தில் வழங்குவதில்லை. காற்றாலைகள் வழங்கும் மின்சாரத்தையும் முழுமையாகப் பயன்படுத்துவதில்லை. இந்தக் காரணங்களால், தமிழகத்தில் காற்றாலைகளில் முதலீடு செய்ய முன்வராமல் இருந்தனர். எனினும், நடப்பாண்டில் அதிக அளவு காற்றாலை மின்சாரத்தை தமிழக மின் வாரியம் பயன்படுத்தியுள்ளது. இதேபோல, மின்சாரத்துக்கான தொகையையும் அந்தந்த மாதமே வழங்கினால், தமிழகத்தில் புதிதாக காற்றாலை அமைக்க பலர் முன்வருவர் என்று காற்றாலை உரிமையாளர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x