Published : 19 Nov 2016 09:44 AM
Last Updated : 19 Nov 2016 09:44 AM

புதிய 500 ரூபாய் நோட்டு தமிழகத்துக்கு வந்து சேரவில்லை: ராமதாஸ் குற்றச்சாட்டு

புதிய 500 ரூபாய் நோட்டு இன்னும் தமிழகத்துக்கு வந்து சேரவில்லை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

உலக அளவில் கறுப்புப் பொருளாதாரத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு இந்தியாதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. அந்த வகையில் கறுப்புப்பணத்தை ஒழிக்கும் நோக்குடன் 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்தது துணிச்சலான நடவடிக்கை. கறுப்புப் பண ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தும் முன், அதற்கான முன்னேற்பாடுகளை செய்து முடிக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச யோசனைகூட மத்திய அரசுக்கு வராமல் போனது ஏன் என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை.

கறுப்புப் பண ஒழிப்பு என்பது பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பணத்தை வெளியில் கொண்டு வந்து வரி வசூலிப்பது அல்லது கறுப்புபணத்தை பயன்படுத்த முடியாமல் தடுத்து, அதை செல்லாமல் போகச் செய்வதுதான். இந்த நடவடிக்கையை ஒருபுறம் செய்துகொண்டு மறுபுறம் இயல்பான பணப்புழக்கத்தை உறுதி செய்வதால், கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படப்போவதில்லை. ஆனால், மத்திய அரசு இதை செய்யத் தவறியதால்தான் அனைத்து பாதிப்புகளும் ஏற்பட்டிருக்கின்றன.

மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள பணமில்லாமல் தவிக்கின்றனர். இவற்றையெல்லாம் யாராவது சுட்டிக்காட்டினால், அவர்களை தேசப்பற்று இல்லாதவர்கள் என்று முத்திரைக் குத்தும் பரப்புரையும் முடுக்கி விடப்பட்டிருக்கிறது. மத்திய அரசு தெளிவாக திட்டமிட்டிருந்தால், இவற்றில் எந்த பாதிப்பும் இல்லாமல் கறுப்புப் பண ஒழிப்பு திட்டத்தை செயல்படுத்தியிருக்க முடியும்.

கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கை தொடங்கி 10 நாட்களாகிவிட்ட நிலையில் புதிய 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் தமிழகத்துக்கு வந்து சேரவில்லை. இவ்வாறாக மத்திய அரசின் அரைகுறை செயல்பாடுகள்தான் வணிகத்தையும், மக்களையும் முடக்கியுள்ளன. இதேநிலை நீடித்தால் பொருளாதார வளர்ச்சி கடுமையாக பாதிக்கப்படும். எனவே, புதிதாக அச்சிடப்பட்டதாக கூறப்படும் ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் முழுமையாக புழக்கத்தில் விட வேண்டும். அதன் மூலம் மக்களின் துயரங்களை முடிவுக்கு கொண்டு வரவும், வணிகத்துக்கு உயிரூட்டவும் அரசு வகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x