பழங்குடி சமூகத்தினர் இலகுவாக சாதிச் சான்றிதழ் பெற உரிய நடவடிக்கைகள் தேவை: திருமாவளவன்

முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் | கோப்புப் படம்
முதல்வர் ஸ்டாலின், திருமாவளவன் | கோப்புப் படம்
Updated on
2 min read

சென்னை: “பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மக்கள், பிற சமூகத்தினரைப் போல் இலகுவாக சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்; ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்து பழங்குடி சான்றிதழ் பெறுவதிலுள்ள சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வு காண வேண்டும்” என்று தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “காஞ்சிபுரம் மாவட்டம் படப்பை பகுதியைச் சார்ந்த வேல்முருகன் என்பவர் அண்மையில் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து பலியான அவலம் மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் உட்பட அவரது குடும்பத்தினர் யாவருக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மலைக்குறவர் எனும் சாதியைக் குறிப்பிட்டு பழங்குடியினர் வகுப்பைச் சார்ந்தவரென சாதிச் சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்துள்ளார். வருவாய் கோட்டாட்சியரை நேரில் சந்தித்து பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் சாதிச் சான்றிதழ் பெறவியலாமல் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். ஆதலால், அவர் இரண்டு நாட்களுக்கு முன்னர் உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வந்த இடத்தில் தீக்குளித்துள்ளார். கடுமையான அளவில் காயமடைந்த அவரைக் காப்பாற்றிட வேண்டுமென காவல்துறையினர், கீழ்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும், சிகிச்சை பலனளிக்காமல் நேற்று காலமானார்.

அவர் இறக்கும் தறுவாயில், ''நான் மலைக்குறவன் இனத்தைச் சேர்ந்தவன்; எனது மகனுக்கு சாதிச் சான்றிதழ் கேட்டு அரசு அலுவலகங்களில் பலமுறை அலைந்து பார்த்தேன். ஆனால் சாதிச் சான்றிதழ் கிடைக்கவில்லை. அந்த வருத்தத்தில் இந்த முடிவை எடுத்தேன். எனது இந்த முடிவின் மூலம் இனிமேலாவது எமது மக்களுக்குத் தடைகள் ஏதுமின்றி சாதிச் சான்றிதழ் கிடைக்கும் என்று நம்புகிறேன்" என மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவரது வாக்குமூலத்திலிந்து, பழங்குடி மக்கள் சாதி சான்றிதழ் பெறுவது எத்தகைய கடினமானது; சிக்கலானது என்பதை அறிய முடிகிறது. அவருக்கு பத்தாம் வகுப்பில் பயிலும் ஒரு மகனும் இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறி ஆகியுள்ளது. ஆகவே, அவரது மனைவிக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்றும் ரூபாய் ஐம்பது லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் விசிக சார்பில் தமிழக அரசை கேட்டுக் கொள்கிறோம்.

அத்துடன், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த மக்கள், பிற சமூகத்தினரைப் போல் இலகுவாக சாதிச் சான்றிதழ் பெறுவதற்கு உரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். மேலும், ஓய்வு பெற்ற நீதிபதியின் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்து பழங்குடி சான்றிதழ் பெறுவதிலுள்ள சிக்கல்களைக் கண்டறிந்து தீர்வு காண வேண்டுமென்றும் தமிழக முதல்வருக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம்'' என்று திருமாவளவன் தனது அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in