Published : 14 Oct 2022 05:24 AM
Last Updated : 14 Oct 2022 05:24 AM

தமிழகத்தில் படிப்பறிவு பெற்றவர்கள் 85.4 சதவீதமாக அதிகரிப்பு - பெண்கள் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவில் உயர்வு

சென்னை: தமிழகத்தில் படிப்பறிவு பெற்றவர்கள் குறிப்பாக பெண்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தமிழக குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்புக்கு முந்தைய ஆய்வில் தெரியவந்துள்ளது.

சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம், மாநிலத்தின் பொருளியியல் - புள்ளியியல் துறை மற்றும் அமெரிக்காவின் மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உள்ள கணக்கெடுப்பு ஆராய்ச்சி மையம் ஆகியவற்றுடன் இணைந்து, தமிழகத்தின் குடும்ப நிலவரங்களின் தொடர் கணக்கெடுப்பு அடிப்படை ஆய்வுக்கு முந்தைய ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு தொகுப்பை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இரு தினங்களுக்கு முன் வெளியிட்டார்.

மாநில அளவிலான இந்த கணக்கெடுப்பு கடந்த 2018 மார்ச் முதல் 2019 மார்ச் வரையிலானதாகும். இதில், அனைத்து வயது வரம்புகளிலும் உள்ள குடும்ப மற்றும் தனிநபர் அளவில் சேகரிக்கப்பட்ட தரவுகளைக் கொண்டு மாவட்ட அளவிலான மதிப்பீடுகள், மாநில அளவிலான மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் 2.12 லட்சம் குடும்பங்களில் உள்ள 7.45 லட்சம் பேரிடம் இருந்து தரவுகள் பெறப்பட்டுள்ளன.

இந்த ஆய்வில், தமிழகத்தில் 53சதவீதம் குடும்பங்கள் கிராமப்புறங்களிலும், 47 சதவீதம் குடும்பங்கள் நகர்ப்புறங்களிலும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மாநிலத்தில் 19 சதவீத குடும்பங்கள் மட்டுமே பெண்களால் வழிநடத்தப்படுகின்றன. குடும்பத் தலைவர்களில் 74 சதவீதம்பேர் விதவைகள். 3.56 சதவீதம் பேர் கணவனை பிரிந்து வாழ்பவர்கள். சென்னை, காஞ்சிபுரம், திருநெல்வேலி மாவட்டங்களில் அதிக அளவில் பெண்கள் குடும்பத் தலைவர்களாக உள்ளனர்.

கல்வி, வேலைவாய்ப்பு

தமிழகத்தில் கல்வி கற்றோர் சதவீதம் கடந்த 2011-ல் 80.1 ஆகஇருந்த நிலையில் 2018-19-ல் 85.4சதவீதமாக உயர்ந்துள்ளது. பெண்களின் கல்வியறிவு கிராமப்புறங்களில் 65.1-லிருந்து 73.7 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 82.3 -லிருந்து87.4 சதவீதமாகவும் உயர்ந்துள்ளது. குறிப்பாக கல்வி பெற்ற பெண்கள் சதவீதம் 73.4 சதவீதத்தில் இருந்து 80.2 சதவீதமாக 2011 மற்றும் 2018-19-க்கு இடைப்பட்ட காலத்தில் உயர்ந்துள்ளது.

நில உரிமை

தமிழகத்தில் உள்ள குடும்பங்களில் 19.4 சதவீதம் பேர் விவசாய நிலங்களை வைத்துள்ளனர். முன்னதாக 2015-16-ல் 18.6 சதவீதம் வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதேபோல், 91 சதவீதம் பேர்ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட வீட்டுச் சொத்துகளை வைத்துள்ளனர். 89 சதவீதம் பேர் கைபேசிவைத்துள்ளனர். கிராமப்புறங் களில் உள்ள குடும்பங்களில் 31 சதவீதம் பேர் கைபேசிகள், இருசக்கர வாகனங்களை வைத்துள்ளனர். 28 சதவீத நகர்ப்புற குடும்பங்கள் குளிர்சாதனப்பெட்டி, இருசக்கர வாகனம், கைபேசி ஆகிய மூன் றையும் வைத்துள்ளனர்.

கிராமப்புறங்களில் 90.6 சதவீதம் குடும்பங்களும், நகர்ப்புறங்களில் 57.8 சதவீதம் குடும்பங்களும் சொந்த வீடுகளில் வசிக்கின்றன. வாடகை வீடுகள் நகர்ப்புறத்தில் 40.8 சதவீதம் உள்ளது. கிராமப்புற குடும்பங்களில் 61 சதவீதமும், நகர்ப்புற குடும்பங்களில் 86 சதவீதமும் வீடுகளுக்குள் கழிப்பறை வசதிகளை பெற்றுள்ளன.

முடிவுகள்

கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட சில வளர்ச்சிக்குறியீடுகளில் தமிழகம் சிறப்பாக செயல்பட்டுள்ளது. அதேநேரம், 15 முதல் 24 வயதுக்குட்பட்ட மக்கள் தொகை 16 சதவீதத்தில், 3 சதவீதம் இளைஞர்கள் எந்த வேலையையும் நாடவில்லை என்பது தெரிகிறது. உயர்கல்வி, தொழிற்கல்வியை ஊக்குவிப்பது ஆகியவற்றில் சாதனை படைக்கும் நிலையில் இந்த பிரிவினர் மீது அக்கறை தேவை.

வேலைவாய்ப்பில் பெண்களின்எண்ணிக்கையை மேம்படுத்த வேண்டும். அதிக வேலைவாய்ப்பை உருவாக்கும் விவசாய மதிப்புக்கூட்டல் துறையை சரியாக உபயோகிக்க வேண்டும். சமூக வளர்ச்சியில் வீட்டு வசதி முக்கியப் பங்கு வகிப்பதால், வீடுகள் கட்டி முடிக்கவும், பழுதுபார்க்கவும், தனிப்பட்ட வீட்டு கழிவறைகளை உபயோகிக்கவும், பாதுகாப்பான குடிநீர் போன்றவற்றுக்கு கொள்கை வகுப்பாளர்களால் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x