கல்லூரி பேராசிரியர்கள் நியமனத்தில் கல்வித் தகுதியில் சமரசம் கூடாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
சென்னை உயர் நீதிமன்றம் | கோப்புப்படம்
Updated on
1 min read

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளைக்குச் சொந்தமான கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களாக உள்ள 254 பேரின் கல்விச் சான்றிதழ்களை சரி பார்க்க வேண்டும் என்று தமிழக கல்லூரி கல்வி இயக்குநருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் உள்ள பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடு நடைபெற்றுள்ளது. தகுதியற்றவர்கள் உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது .

இந்த வழக்குகள் நீதிபதி எஸ் .எம். சுப்பிரமணியம் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி " கல்லூரிகளில் தகுதியற்ற ஆசிரியர்களை நியமித்தால் இறுதியில் பாதிக்கப்படுபவர்கள் மாணவர்கள்தான். கல்லூரி நிர்வாகிகள் ஆசிரியர் கல்வித் தகுதி விஷயத்தில் எந்த ஒரு அனுதாபமோ, சமரசமோ காட்டக்கூடாது . அது அரசியல் அமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. எனவே தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களின் தகுதிகளை சரி பார்க்க வேண்டும். இந்த கல்லூரியில் செய்யப்பட்ட நியமனங்கள் முறையானதா, சரியானதா என்பதை கல்லூரி கல்வி இயக்குநர் சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்.

ஏற்கெனவே அறிவிப்பு வெளியிடப்பட்டு தேர்வு செய்யப்பட்ட 254 பேராசிரியர்களுக்கு சம்மன் அனுப்பி அவர்களுடைய கல்வி தகுதி மற்றும் அசல் ஆவணங்களை சரி பார்க்க வேண்டும்.இந்த ஆய்வு குறித்த அறிக்கையை வரும் நவ.14-ம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என கல்லூரி கல்வி இயக்குநருக்கு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in