Published : 13 Oct 2022 06:43 AM
Last Updated : 13 Oct 2022 06:43 AM

சிவகாசி மக்களின் வாழ்வாதாரத்தை காக்க டெல்லியில் பட்டாசு விற்பனையை அனுமதிக்க வேண்டும்: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தில் சிவகாசியை சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, விதிகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை டெல்லியில் அனுமதிக்கும்படி அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து கெஜ்ரிவாலுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நான் கடந்தாண்டு அக்.13-ம்தேதி பட்டாசு விற்பனைக்கு ஒட்டுமொத்தமாக தடை விதிக்க வேண்டாம் என்றும், விதிகளுக்கு உட்பட்ட பட்டாசுகளை விற்க அனுமதிக்கும்படியும் கடிதம் எழுதியிருந்ததை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். உச்ச நீதிமன்ற வழிகாட்டுதல்படி, பண்டிகை காலங்களில் இரண்டு மணிநேரம் பட்டாசுவெடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. பண்டிகைகால கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசுகளை வெடிப்பது என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்படும் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நடைமுறையாகும். இந்திய நகரங்களில் காற்று மாசுபாட்டுக்குப் பங்களிக்கும் காரணிகளாக வாகனங்கள் மற்றும் தொழில்துறை உமிழ்வுகள் இருக்கின்றன.

ஒருசில நாட்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகளால் மிகக்குறைந்த அளவிலான மாசுதான் ஏற்படும் என்பதால் பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தைக் கருத்தில்கொண்டு, உரிமம் பெற்ற வணிகர்கள் மூலம் அறிவியல் முறைப்படி உருவாக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. வேறு எந்த மாநிலமும் பட்டாசுக்கு முழுமையாகத் தடை விதிக்காதபோது, டெல்லியில் மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தத்தடையை நீக்குவதன் மூலம், தமிழகத்தில் டெல்லியை சுற்றியுள்ள லட்சக்கணக்கான மக்கள், குறிப்பாக வாழ்வாதாரத்துக்காக இந்தத்தொழிலை நம்பியிருக்கும் கிராமப்புற பெண்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற முடியும். எனவே, விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்டாசுகளின் விற்பனையை டெல்லியில் அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x