Published : 12 Oct 2022 06:28 AM
Last Updated : 12 Oct 2022 06:28 AM

22% ஈரப்பத நெல் கொள்முதலுக்கு அனுமதி தேவை: மத்திய அரசுக்கு உணவுத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கடிதம்

சென்னை: தமிழகத்தில் மழை சூழல், விவசாயிகளின் நிலையை கருத்தில் கொண்டு 22 சதவீத ஈரப்பதம் வரையிலான நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்குமாறு மத்திய உணவுத் துறை செயலருக்கு தமிழக உணவுத் துறை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக மத்திய உணவுத் துறை செயலருக்கு அவர்எழுதியுள்ள கடிதம்: தமிழகத்தில் மாநில அரசால் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பதம் குறித்து மத்திய அரசு கடந்த ஆண்டில் சில தளர்வுகளை அளித்தது. அதாவது, நெல்லின் ஈரப்பதம் 17 சதவீதத்துக்கு பதிலாக 19 சதவீதம் வரை இருக்கலாம் என தெரிவித்தது. அதேபோல, நிறம் மங்கியது, முளைத்தது, அந்துப்பூச்சி தாக்கிய நெல்லின் ஈரப்பதம் 4 சதவீதத்தை தாண்டக் கூடாது. விளையாதது, சுருங்கிய நெல் 4 சதவீதம் ஈரப்பதம் இருக்கலாம் என்றும் தெரிவித்தது. முன்னதாக, 20 சதவீதம் ஈரப்பதம் இருந்தாலும் நெல்லை மாநில அரசு கொள்முதல் செய்யலாம் என்று மத்திய அரசு கடந்த 2020 டிச.1-ம் தேதி தனது கடிதத்தில் அனுமதி அளித்திருந்தது. அதேபோல, சேதமடைந்தது, நிறம் இல்லாததது, அந்துப்பூச்சி தாக்கிய நெல்லை 7 சதவீதம் ஈரப்பதம் இருந்தாலும் கொள்முதல் செய்யலாம் என தெரிவித்திருந்தது.

தற்போது வடகிழக்கு பருவமழையின் காரணமாக காற்றில் ஈரம் அதிகரித்துள்ளது. எனவே,விவசாயிகளின் துன்பத்தை குறைக்கும் வகையில், தமிழக அரசின்கொள்முதல் முகமையான நுகர்பொருள் வாணிபக் கழகம் 22 சதவீதம் ஈரப்பதத்துடன் கூடிய நெல்லை கொள்முதல் செய்ய அனுமதிக்க வேண்டும். விளையாத, சுருங்கிய நெல்லுக்கு 3-க்கு பதிலாக 5 சதவீதமும், சேதமடைந்தது, நிறம் இல்லாதது, முளைத்தது, அந்துப்பூச்சி தாக்கிய நெல்லுக்கு 5-க்கு பதிலாக 7 சதவீதமும் என நிபந்தனையில் தளர்வு அளிக்க வேண்டும். இவ்வாறான ஈரப்பத அளவுகளில் கொள்முதல் செய்யப்படும் நெல்லின் மீதுள்ள உமி உடனேநீக்கப்பட்டு, அரிசியும் மத்திய அரசு நிர்ணயித்த அளவுகளின் படி கிடைக்கும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x