Published : 11 Oct 2022 04:45 AM
Last Updated : 11 Oct 2022 04:45 AM

சாயல்குடி அருகே குடும்பத்தினரை ஊரைவிட்டு ஒதுக்கிய ஊர் நிர்வாகிகள்: பாதிக்கப்பட்டோர் ராமநாதபுரம் ஆட்சியரிடம் புகார்

ராமநாதபுரம்

சாயல்குடி அருகே குடும்பத்தினரை ஊரைவிட்டு 14 ஆண்டுகள் ஒதுக்கி வைத்ததாக, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் புகார் அளித்தனர்.

சாயல்குடி அருகே கன்னிகாபுரியைச் சேர்ந்தவர் காசி(61). இவர் தனது மகன்கள் உள்ளிட்ட குடும்பத்தினரை, கடந்த 14 ஆண்டுகளாக ஊரைவிட்டு ஒதுக்கி வைத்ததாகவும், மீண்டும் ஊருக்குள் சேர்த்துக் கொள்ள அனுமதி மறுக்கும் முன்னாள் ஊர் நிர்வாகிகள் மீது நடவடிக்கை கோரி ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மனு அளித்தார்.

இது குறித்து காசி கூறியதாவது: எனக்கு 5 மகன்கள், 2 மகள்கள். 2008-ல் எனது 15 வயது மகன் (அப்போதைய வயது) , எங்கள் ஊரைச் சேர்ந்த ஒரு பெண்ணைக் காதலித்ததாகக் கூறி ஊர் நிர்வாகிகளான மாரியப்பன், பொன்னுச்சாமி ஆகியோர் குற்றம் சாட்டினர். \

மேலும் சிறுவனான எனது மகனுக்குத் திருமணமும் செய்து வைத்தனர். இருப்பினும் இருவரும் சில மாதங்களில் பிரிந்துவிட்டனர். இந்த திருமணத்துக்கு நான் எதிர்ப்பு தெரிவித்ததால், என்னையும், எனது குடும்பத்தினரையும் 14 ஆண்டுகள் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகக் கூறி, நாங்கள் குடியிருந்த வீட்டையும் ஊர் நிர்வாகிகள் அபகரித்துக் கொண்டனர்.

நாங்கள் அருகிலுள்ள கிராமத்தில் 14 ஆண்டுகளாக வசித்து வருகிறோம். எனது இளைய மகன் பாக்கியராஜ் மட்டும் ஊர் நிர்வாகிகள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டதால், அங்குள்ள சுனாமி குடியிருப்பில் குடும்பத்துடன் வசிக்கிறார்.

தற்போது அவர்கள் அளித்த 14 ஆண்டுகள் தண்டனை முடிந்தும், ஊருக்குள் செல்லவும், அபகரித்து வைத்துள்ள தங்கள் வீட்டை திரும்பித் தர மறுத்தும், மேலும் 4 ஆண்டுகள் ஊரைவிட்டு ஒதுக்கி வைப்பதாகவும், வீட்டை ஒப்படைக்க ரூ. 10 லட்சம் கட்ட வேண்டும் எனக் கூறி கொலை மிரட்டல் விடுகின்றனர்.

எனவே ஊர் முன்னாள் நிர்வாகிகள் மாரியப்பன், பொன்னுச்சாமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுத்து, எனது வீட்டை மீட்டுத்தர வேண்டும். அல்லது என்னையும், குடும்பத்தினரையும் கருணைக் கொலை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x