எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீடு | கர்நாடகம் போல் தமிழகத்திலும் துணிச்சல் நடவடிக்கை தேவை: ராமதாஸ்

பாமக நிறுவனர் ச.ராமதாஸ் | கோப்புப் படம்
பாமக நிறுவனர் ச.ராமதாஸ் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: கர்நாடகத்தில் பட்டியலினத்தவர், பழங்குடியினர் இடஒதுக்கீடு அதிகரிக்கப்படுவது வரவேற்கத்தக்கது என்றும், அம்மாநில அரசை தமிழகம் பின்பற்ற வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “கர்நாடகத்தில் மக்கள்தொகை அடிப்படையில் பட்டியலினத்தவருக்கான இடஒதுக்கீடு 15%-ல் இருந்து 17% ஆகவும், பழங்குடியினருக்கான இடஒதுக்கீடு 3%-ல் இருந்து 7% ஆகவும் உயர்த்த அம்மாநில அரசு முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. இது மிகச்சிறந்த சமூக நீதி காக்கும் நடவடிக்கையாகும்.

தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கான இடஒதுக்கீட்டை அவர்களின் மக்கள்தொகைக்கு இணையாக 22% ஆக உயர்த்த வேண்டும் என்று 1980-ஆம் ஆண்டு வன்னியர் சங்கம் தொடங்கப்பட்ட நாளில் இருந்து வலியுறுத்தி வருகிறேன். இந்தக் கோரிக்கையையும் வலியுறுத்திதான் தொடர் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

பட்டியலின, பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அதிகரிப்பதால், மொத்த இடஒதுக்கீட்டையும் 56% ஆக உயர்த்த கர்நாடகம் தீர்மானித்திருப்பது துணிச்சலான நடவடிக்கை ஆகும். தமிழகத்திலும் அத்தகைய துணிச்சலான நடவடிக்கையை எடுக்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in