

சென்னை: தனியார் காப்பகங்களை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி நகராட்சி பகுதியில்உள்ள காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்டதால் 3 குழந்தைகள் மரணமடைந்துள்ள அதிர்ச்சியளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. மேலும் 12 பேர்தீவிர சிகிச்சை பெறுகின்றனர். தனியார் குழந்தைகள் காப்பகம், முதியோர் காப்பகங்கள் ஆகியவை சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு விதிகளை பின்பற்றி செயல்படுகிறதா? என்பதை அரசுதொடர்ந்து கண்காணிக்க வேண்டும்.
காப்பகத்தில் தயாரிக்கப்பட்டு வழங்கிய உணவு கெட்டுப்போனதா? வெளியில் இருந்து வழங்கப்பட்ட உணவு விஷமாகி விட்டதா? என குழம்புவதும், குழப்புவதும் குற்றவாளிகளை தப்பிக்க செய்யும் வழிமுறையாக அமைந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையோடு விசாரணை அமைய வேண்டும். குற்றவாளிகள் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடாமல், உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் காப்பகங்கள் இயங்கும் முறை, அதில் உள்ளோர் உடல்நலன், வழங்கப்படும் உணவு போன்றவற்றை காலமுறைப்படி பரிசோதித்து அறிக்கை பெறுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். உயிரிழந்த குழந்தைகளுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.