

சென்னை: மழலையர் வகுப்புகளுக்கு நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பாமக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கைகள் விவரம்:
பாமக நிறுவனர் ராமதாஸ்: மழலையர் வகுப்புகளுக்கு சிறப்பு பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்றுவலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், தினக்கூலிகளைவிட குறைந்த ஊதியத்தில் ஆசிரியர்கள் நியமிக்கப்படுவதை ஏற்கமுடியாது. அதேபோல, மழலையர் வகுப்புகளுக்கான ஆசிரியர்களாக, இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்களை நியமிப்பது பொருத்தமற்றது. அவர்களால் மழலையர் வகுப்புகளை திறம்பட நடத்த முடியாது.
மேலும், எல்கேஜி, யுகேஜி ஆகிய 2 வகுப்புகளுக்கும் ஒரேஆசிரியரை நியமிப்பது போதுமானதல்ல. ஓர் ஆசிரியரை நியமிப்பது, மழலையர் வகுப்புதொடங்கப்பட்டதன் நோக்கத்தையே சீரழித்துவிடும். எனவே, ஒரு பள்ளிக்கு 3 ஆசிரியர்கள் வீதம், 2,381 பள்ளிகளுக்கும் 5,143 மான்டிசோரி ஆசிரியர்களை, இடஒதுக்கீட்டைப் பின்பற்றி நிரந்தர ஆசிரியர்களாக நியமிக்க அரசு முன்வர வேண்டும்.
மக்கள் நீதி மய்யம் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம்: தமிழகத்தில் 2,831 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்பட்டு வந்தன. இவற்றுக்கு கிராமங்களில் அதிக வரவேற்பு இருந்தது. இந்த நிலையில், இவ்வகுப்புகளை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டது. இந்த வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற பல்லாயிரக்கணக்கானோர் வேலைக்காக காத்திருக்கும்போது, தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களையே நியமிப்பது ஏன்? நிரந்தர ஆசிரியர் நியமனம்என்பது தற்காலிக ஆசிரியர்நியமனத்தில் நடக்க வாய்ப்பு உள்ளமுறைகேடுகளையும், அரசியல் தலையீடுகளையும் தடுத்து நிறுத்தும். மாணவர்களுக்கு தரமான கல்வியையும், ஆசிரியர்களுக்கு நியாயமான ஊதியத்தையும் உறுதிப்படுத்தும். இதில், தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ஆகியோர் உடனடியாக கவனம் செலுத்தி, ஆசிரியர் மற்றும் மாணவர் நலன்களைப் பாதுகாப்பது அவசியம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.