வேலூர் | தெருக்களில் குப்பை கொட்டினால் அபராதம்: விழிப்புணர்வு போஸ்டர்கள் ஒட்ட நடவடிக்கை

வேலூர் மாநகராட்சியில் தெருக்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கும் அறிவிப்பு குறித்த போஸ்டரை மேயர் சுஜாதா வெளியிட்டார். படம்: வி.எம்.மணிநாதன்.
வேலூர் மாநகராட்சியில் தெருக்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கும் அறிவிப்பு குறித்த போஸ்டரை மேயர் சுஜாதா வெளியிட்டார். படம்: வி.எம்.மணிநாதன்.
Updated on
1 min read

வேலூர்: வேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, ஆங்காங்கே குப்பை தொட்டி வைக்கும் நடைமுறை அகற்றப்பட்டுள்ளது. இதனால், குப்பையை சாலைகளில் கொட்டுவது, காலி இடங்களில் தீ வைத்து எரிப்பது உள்ளிட்டவை நடைபெறுகிறது. இதனை தடுக்க அபராதம் விதிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வேலூர் மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துணை விதிகள் 2016-ன் கீழ், வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்து அளிக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் காலிமனைகளில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றுக்கு அபராதம் விதிக்கப்படவுள்ளது. அதன்படி, வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.500, வணிக வளாகங்களுக்கு ரூ.1,000 அபராதம் விதிக்கப்படவுள்ளன. தெருக்கள், கழிவுநீர்கால்வாய்கள் மற்றும் காலி மனைகளில் குப்பையை கொட்டினால் ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும்.

வீட்டில் உள்ள குப்பைகளை வெளியே வைத்து எரித்தால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு ரூ.200 அபராதமாக வசூலிக்கப்படும். அதேநேரம், குப்பையை தெருக்களில் கொட்டுபவர்களை வீடியோ எடுத்து அனுப்பினால் அவர்களுக்கு அன்பளிப்பாக ரூ.200 அளிக்கவுள்ளனர். இந்த புதிய நடைமுறை வரும்10-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது தொடர்பாக மாநகராட்சி பகுதிகளில் போஸ்டர்கள் ஒட்டவுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in