திருப்பூர் காப்பகத்தில் உயிரிழந்த 3 குழந்தைகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம்: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

கோப்புப் படம் | முதல்வர் மு.க.ஸ்டாலின்
கோப்புப் படம் | முதல்வர் மு.க.ஸ்டாலின்
Updated on
1 min read

சென்னை: திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்தினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் குழந்தைகள் காப்பகத்தில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், " திருப்பூர் மாவட்டம், அவினாசி வட்டம், ராக்கியாபாளையம் கிராமம், மஜரா திருமுருகன்பூண்டியில் செயல்பட்டுவரும் தனியார் குழந்தைகள் காப்பகத்தில் தங்கி கல்வி பயின்று வந்த மாணவர்களில், மாதேஷ் (15), பாபு (13) மற்றும் ஆதிஷ் (8) ஆகிய மூன்று சிறுவர்களும் காப்பகத்தில் உணவு உட்கொண்ட பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 6.10.2022 அன்று மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லும்போது வழியிலேயே இறந்துவிட்டனர் என்ற வேதனையான செய்தியினைக் கேட்டு மிகுந்த துயருற்றேன்.

உயிரிழந்த பிள்ளைகளின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். சிகிச்சையிலுள்ள சிறுவர்களுக்கு தேவையான மருத்துவ உதவி வழங்க அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூபாய் இரண்டு லட்சம் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்" என்று கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in