

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி நவம்பர் 14-ம் தேதி (நாளை) வரை மின் கட்டணத்தை செலுத்தலாம் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டுள்ளதால் பொது மக்கள் மத்தியில் பணப் புழக்கம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வங்கி, ஏடிஎம்களில் பணம் பெறுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. போதிய அளவில் சில்லறை இல்லாததால், பொது மக்கள் மின் கட்டணம் செலுத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தமிழகத்தில் நவம்பர் 11-ம் தேதி இரவு வரை பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி மின்கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதை ஏராளமான மக்கள் பயன்படுத்திக்கொண்டனர். இந்நிலையில் இந்த நோட்டுகளைப் பயன்படுத்தி 14-ம் தேதி வரை மின் கட்டணம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மின்சாரத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “மக்களின் சிரமங்களை போக்கும் வகையில், பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி மின் கட்டணத்தை 14 ம் தேதி வரை கட்டலாம். இந்த மின் கட்டணங்களை அலுவலக நேரத்தில் மட்டும் பொதுமக்கள் செலுத்திக் கொள்ளலாம்” என்றார்.